Published : 08 Jul 2020 09:25 PM
Last Updated : 08 Jul 2020 09:25 PM

தமிழக மாதிரியை பின்பற்றி மத்திய அரசும் ஓபிசி இடஒதுக்கீட்டை தொடர வேண்டும்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் பழனிசாமி கடிதம்

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்க்கும் முடிவினைத் மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் கிரீமிலேயர் பிரிவினரைக் கணக்கிடுவதற்கான ஒரு கூறாக சம்பளத்தைச் சேர்ப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல் வெளியானதையடுத்து, தமிழக அரசியல் தலைவர்கள் பலர் இந்த முடிவை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய கேட்டுக் கொண்டுள்ளனர்.


தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அந்த கடிதத்தில் அவர் கூறியுள்ளதாவது:

‘‘மத்திய அரசின் நேரடி பணி நியமனங்களில் 27 சதவீத இடங்கள் ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதற்கு குறிப்பிட்ட கிரிமிலேயரின் கீழ்வருபவர்களுக்கு பொருந்தாது என வகைப்படுத்தப் படுத்தப்படுகிறது.

கிரிமிலேயருக்கு 6 குறிப்பிட்ட தகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ள நிலையில் வருமானம் ஒரு நிபந்தனையாக கொண்டு வரப்படுகிறது.

ஓபிசி இடஒதுக்கீடு பெறுவோர் பெற்றோரின் ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய் என 1993-ம் ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட நிலையில் இது 1.9.2017 அன்று 8 லட்சமாக உயர்த்தப்பட்டது.

தற்போது பெற்றோரின் ஒட்டுமொத்த ஆண்டு வருமானத்தில் விவசாய வருமானத்தையும் சேர்க்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.

ஆனால் தற்போது கிரிமிலேயர் கணக்கிடும்போது விவசாய வருமானம் சேர்க்கப்படாமல் உள்ளது. விவசாய வருமானத்தை பெற்றோரின் ஒட்டுமொத்த வருமானத்தில் சேர்த்தால் பெரும்பாலானோருக்கு அரசு பணியை பெறுவதிலும், அரசு நலத்திட்டங்களை பெறுவதிலும் சிக்கல் ஏற்படும். இது இடதுஒதுக்கீடு கிடைக்காமல் போகும் நிலையை ஏற்படுத்தும்.

எனவே ஓபிசி கிரமிலேயர் வகைப்படுத்தும் வருவாய் பிரிவில் ஊதியத்தை சேர்க்கக்கூடாது. ஓபிசி பிரிவினருக்கான வருமான உச்சவரம்பு தொடர்பான புதிய அணுகுமுறையை திரும்பப் பெற வேண்டும். வருமானத்தை கணக்கிடும் போது பெற்றோர்களின் ஊதியம், விவசாய வருமானத்தை சேர்க்கக்கூடாது.

ஓபிசி பிரிவினருக்கு கிரிமிலேயர் வரம்பை ஏற்கெனவே உள்ள நடைமுறை விதிகளின் படியே கணக்கிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் தற்போது உள்ள மாதிரியை பின்பற்றி மத்திய அரசும் ஓபிசி இடஒதுக்கீட்டை தொடர வேண்டும். ’’

இவ்வாறு முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x