

இந்திய சிறைகளில் இருக்கும் 85 இலங்கை மீனவர்களை விடுதலை செய்ய மத்திய அரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது.
மோடி பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்புக்கும், இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சேவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.
இதனையொட்டி, தமது நாடுகளில் சிறை வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை விடுதலை செய்ய நவாஸ் ஷெரீப்பும், ராஜபக்சேவும் நல்லெண்ணத்தின் வெளிப்பாடாக உத்தரவு பிறப்பித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியை இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே நேற்று சந்தித்து பேசினார். இந்தச்சந்திப்பின் போது, இலங்கை சிறைகளில் இருந்து இந்திய மீனவர்கள் விடுவிக்கப்பட்டதைப் போன்று இந்திய சிறைகளில் இருந்து இலங்கை மீனவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதை பிரதமர் நரேந்திர மோடி ஏற்றுக் கொண்டதாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து தமிழகம், ஒடிஷா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் சிறைகளில் இருக்கும் 85 இலங்கை மீனவர்கள் விடுதலை செய்யப்பட உள்ளனர்.