Last Updated : 08 Jul, 2020 02:04 PM

 

Published : 08 Jul 2020 02:04 PM
Last Updated : 08 Jul 2020 02:04 PM

சாத்தான்குளம் வழக்கு: 14 போலீஸாரிடம் சிபிசிஐடி விசாரணை- சிலர் கைது செய்யப்படலாம் எனத் தகவல்

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கு தொடர்பாக சிறப்பு உதவி ஆய்வாளர்கள் 2 பேர் உள்ளிட்ட 14 பேரிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிலர் கைது செய்யப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதனைக் கண்டித்து வியாபாரிகள், அரசியல் கட்சியினர், பல்வேறு அமைப்பினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தினர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதையடுத்து சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கை சிபிஐ-க்கு மாற்றுவதாக தமிழக அரசு அறிவித்தது.

மேலும், இது தொடர்பாக அரசாணையும் வெளியிட்டது. இந்தத் தகவலை உயர் நீதிமன்ற கிளையிலும் தமிழக அரசு தெரிவித்தது. இருப்பினும் சிபிஐ விசாரணையை தொடங்க கால தாமதம் ஆகும் என்பதால், அதுவரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 பேர் கைது:

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 5 பேரையும் சிபிசிஐடி போலீஸார் அதிரடியாக கைது செய்து மதுரை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.

சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் கடந்த 8 நாட்களாக தூத்துக்குடியிலேயே முகாமிட்டு இந்த வழக்கு விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக இந்த வழக்கு தொடர்பான சாட்சியங்களை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர். சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள், அரசு மருத்துவர், உயிரிழந்தோர் குடும்பத்தினர், நண்பர்கள், சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் என 30-க்கும் மேற்பட்ட சாட்சிகளிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி சாட்சியங்களைப் பதிவு செய்துள்ளனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக சில சிசிடிவி காட்சிகள், ஆவணங்கள், தடயங்களையும் சேகரித்துள்ளனர்.

14 பேரிடம் விசாரணை:

இந்த விசாரணையின் அடிப்படையில், கடந்த மாதம் 19-ம் தேதி இரவு மற்றும் 20-ம் தேதி பகலில் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியில் இருந்த சிறப்பு உதவி ஆய்வாளர்கள் இருவர் உள்ளிட்ட 14 பேரை சிபிசிஐடி போலீஸார் இன்று காலை தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர்.

அலுவலகத்தை பூட்டிவிட்டு உள்ளே வைத்து அவர்களிடம் காலை முதல் சிபிசிஐடி அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த வழக்கு விசாரணையை சிபிஐ நேற்று ஏற்றுக் கொண்டது. இருப்பினும் வழக்கு விசாரணையை சிபிஐ முறைப்படி தொடங்க சில நாட்கள் ஆகலாம் எனக் கூறப்படுகிறது.

அதற்குள் இந்த வழக்கு தொடர்புடைய அனைவரையும் கைது செய்துவிட வேண்டும் என முனைப்புடன் செயல்பட்டு வருவதாக சிபிசிஐடி அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x