

தூத்துக்குடியில் மீனவர்கள் வசிக்கும் திரேஸ்புரத்தில் கரோனா வேகமாகப் பரவி வருகிறது. இதனால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தடை விதிக்கப்பட்டது. மீன்பிடித் துறைமுகத்தையும் அதிகாரிகள் மூடினர்.
இதனால் அதிருப்தி அடைந்த விசைப்படகு மீனவர்கள் 200 பேர், மீன்பிடித் துறைமுகம் அருகே நேற்று சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏற்கெனவே 3 மாதங்களாக மீன்பிடிக்கச் செல்லாததால் வாழ்வாதாரம் இழந்துள்ள நிலையில், மீண்டும் தடையால் தங்கள் வாழ்க்கையே கேள்விக்குறியாகிவிடும் என அவர்கள் தெரிவித்தனர். மீன்வளத்துறை இணை இயக்குநர் சந்திரா, உதவி இயக்குநர் வயோலா, தூத்துக்குடி நகர் டிஎஸ்பி கணேஷ் ஆகியோர் மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற பகுதி மீனவர்கள் இன்று (ஜூலை 8) முதல் மீன்பிடிக்கச் செல்லலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து மீனவர்கள் கலைந்து சென்றனர்.