Published : 07 Jul 2020 07:03 PM
Last Updated : 07 Jul 2020 07:03 PM

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிராகப் போராட்டம்: மனவளர்ச்சி குன்றியவர் மீதான வழக்கு ரத்து

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்துக்கு எதிராக மதுரையில் சாலை மறியல் நடத்தியது தொடர்பாக மனவளர்ச்சி குன்றியவர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை ரயில் நிலையம் அருகே திராவிட விடுதலைக் கழகம் சார்பில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தைக் கண்டித்து கடந்த 22.5.2018-ல் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இது தொடர்பாக 28 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் 20 வயது கொண்ட நபர் 7-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். அவர் மன வளர்ச்சி குன்றியவர். இதனால் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் நிதிபதி பி.புகழேந்தி இன்று பிறப்பித்த உத்தரவு:

இந்திய தண்டனைச் சட்டத்தில் 7-க்கு மேல் 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் மனநிலை முதிர்ச்சியாக இருக்காது எனக் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கில் மனுதாரருக்கு வயது 20 ஆக இருந்தாலும், அவரது மனத்தின் வயது 11 ஆண்டு 2 மாதங்கள் மட்டுமே என மருத்துவர் சான்று அளித்துள்ளனர்.

சாலை மறியல் நடத்திய அமைப்பிலும் அவர் உறுப்பினராக இல்லை. மறியல் நடைபெற்ற இடத்தில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். மன வளர்ச்சி குன்றியவர் மீது வழக்குப் பதிவு செய்தது துரதிர்ஷ்டவசமானது. எனவே மனுதாரர் மீதான வழக்கு ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x