

காவல் நிலையங்களில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸில் சேவா பாரதி அமைப்பினர் செயல்படத் தடை விதிக்கக் கோரிய புகாரில், தமிழக உள்துறை முதன்மைச் செயலாளர், டிஜிபி ஆகியோர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோரை விசாரணைக்கு அழைத்துச் சென்று சாத்தான்குளம் போலீஸார் தாக்கி பின்னர் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைத்தனர். அங்கு தந்தை, மகன் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இதுகுறித்து சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு, தாக்குதல் நடத்திய ஆய்வாளர் உள்ளிட்ட அனைத்து போலீஸார் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளனர். போலீஸ் விசாரணையில் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் உதவியுடன் தாக்குதல் நடத்தியதில் இருவரும் உயிரிழந்ததாகத் தகவல் வெளியானது.
மேலும், ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸில் சேவா பாரதி என்ற அமைப்பினர் பலர் இடம் பெற்றுள்ளதாகவும் அவர்களை நீக்கவேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது. ஊரடங்கு நேரத்தில் சட்டம் ஒழுங்கைக் கையில் எடுத்து, பொதுமக்கள் மீதும் பல்வேறு தாக்குதல்களை அவர்கள் நடத்தியுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்நிலையில் இந்தச் சம்பவத்தை மேற்கோள் காட்டி தூத்துக்குடியைச் சேர்ந்த மக்கள் மேம்பாட்டுக் கழக அமைப்பாளர் அதிசய குமார் என்பவர், காவல் நிலையங்களில் உள்ள ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினர் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதால் அந்த அமைப்பை நிரந்தரமாகத் தடை செய்ய வேண்டும் எனக் கோரி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் துரை ஜெயச்சந்திரனுக்கு புகார் மனு அனுப்பினார்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளத்தில் தந்தை, மகனைக் காவல்துறையினர் அடித்துக் கொன்ற சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆணையம் ஏற்கெனவே தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
தற்போது இந்தப் புகார் மனுவையும் விசாரணைக்கு எடுத்துக்கொண்ட மனித உரிமை ஆணையத் தலைவர் துரை ஜெயச்சந்திரன், இதுகுறித்து விளக்கம் அளிக்க தமிழக காவல்துறை டிஜிபி திரிபாதி மற்றும் உள்துறைச் செயலர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
* தமிழக காவல்துறையின் அதிகாரபூர்வ பணிகளை மேற்கொள்ள ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைப் பயன்படுத்த சட்டபூர்வ அனுமதி உள்ளதா?
* காவல்துறையினரின் அதிகாரபூர்வ பணிகளை மேற்கொள்ள ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பைப் பயன்படுத்துவது மனித உரிமை மீறல் ஆகாதா?
* மனித உரிமை மீறல்களில் ஈடுபடும் ப்ரண்ட்ஸ் ஆஃப் போலீஸ் அமைப்பினரை நிரந்தரமாகத் தடை செய்யக் கோருவதில் நியாயம் உள்ளதா?
என்பது குறித்து, நான்கு வாரங்களில் விளக்கமளிக்க தமிழக உள்துறைச் செயலாளர் மற்றும் டிஜிபிக்கு உத்தரவிட்டுள்ளார்.