Published : 07 Jul 2020 05:14 PM
Last Updated : 07 Jul 2020 05:14 PM

மாவட்டங்களில் தீவிரமாகப் பரவும் கரோனா தொற்று: மத்திய உயர்மட்டக் குழு மீண்டும் தமிழகம் வருகை

சென்னை

தமிழகத்தில் மாவட்டங்களில் அதிகரிக்கும் தொற்றுப் பரவல், கரோனா தொற்றால் உயிரிழப்பு அதிகரிப்பு, தமிழகத்தில் எடுக்கப்பட்டு வரும் தொற்றுத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு நடத்த மத்திய உயர்மட்டக் குழு நாளை சென்னை வருகிறது.

கரோனா தொற்று தமிழகத்தில் வேகமாக அதிகரித்து வருகிறது. ஆரம்பத்தில் சென்னையில் மட்டுமே ஆயிரக்கணக்கில் தொற்று எண்ணிக்கை இருந்தது. மற்ற 36 மாவட்டங்களில் 10, 20 என்கிற எண்ணிக்கையிலேயே இருந்தது. இந்நிலையில் சென்னையில் தீவிர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது சென்னையிலிருந்து பொதுமக்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்தனர்.

அதேபோன்று ஊரடங்கு தளர்வு காரணமாக ரயில், விமானப் போக்குவரத்து அனுமதிக்கப்பட்டது. வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து பொதுமக்கள் தமிழகம் திரும்பியதால் மாவட்டம் முழுவதும் கரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்தது. கடந்த ஒரு மாதத்திற்குள் மாவட்டங்களில் தொற்று எண்ணிக்கை நான்கு இலக்கத்தை அடைந்துள்ளது.

தமிழகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. இன்று அதிகபட்சமாக 1,747 பேருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் சென்னையில் தொற்று எண்ணிக்கை 70,017 ஆக அதிகரித்துள்ளது. சென்னையைத் தவிர மற்ற மாவட்டங்களில் வேகமாகத் தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

தமிழகத்தில் நேற்று தொற்று கண்டறியப்பட்ட 35 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு 6,853, திருவள்ளூர் 4,983, மதுரை 4,338, காஞ்சிபுரம் 2,729, திருவண்ணாமலை 2,534, வேலூர் 1,980, கடலூர் 1,277, தூத்துக்குடி 1,271, ராமநாதபுரம் 1,454, சேலம் 1,288, கள்ளக்குறிச்சி 1,246, விழுப்புரம் 1,232, ராணிப்பேட்டை 1,193, திருநெல்வேலி 1,114, தேனி 1,128, திருச்சி 1,004 ஆகிய 16 மாவட்டங்கள் நான்கு இலக்க எண்ணிக்கையைக் கடந்துவிட்டன.

மதுரையும், திருவள்ளூரும் மிக வேகமாக 5,000 என்கிற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. செங்கல்பட்டு 7,000 என்கிற எண்ணிக்கையை நெருங்கியுள்ளது. இந்நிலையில் பல மாவட்டங்களில் ஊரடங்கு தளர்வுடன் உள்ளது. தமிழகத்தில் தொற்று எண்ணிக்கை அதிகரித்த அளவுக்கு குணமடைவோர் எண்ணிக்கையும் 57 சதவீதம் அளவுக்கு உள்ளது. இந்நிலையில் தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவல் குறித்து ஆய்வு செய்ய மத்தியக்குழு நாளை மாலை சென்னை வருகிறது. மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலர் ஆர்த்தி அஹுஜா தலைமையிலான 5 பேர் கொண்ட மத்திய உயர்மட்டக் குழு தமிழகம் வருகிறது. இதனை மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இந்த மத்திய உயர்மட்டக் குழுவில் கூடுதல் செயலர் ஆர்த்தி அஹுஜா தவிர, இணைச் செயலர்கள் ராஜேந்திர ரத்னு, சுபோத் யாதவா, ஜிப்மர் மருத்துவர்கள் ஸ்வரூப் சாஹு, சதீஷ் ஆகியோர் உள்ளனர். இவர்கள் தற்போது பெங்களூருவில் ஆய்வுப் பணியில் உள்ளனர். அதை முடித்துவிட்டு நாளை மாலை தனி விமானம் மூலம் சென்னை வருகின்றனர்.

இவர்கள் ஜூலை 8-ம் தேதி முதல் ஜூலை 10-ம் தேதி வரை தமிழகத்தில் ஆய்வு மேற்கொள்வார்கள். தமிழகத்தில் தொற்றுப் பரவல், தடுப்பு நடவடிக்கைகள், ஆய்வுகள், சிகிச்சை மையங்கள், கரோனா கேர் சென்டர், கரோனா தொற்றால் உயிரிழப்பு, கட்டமைப்பு வசதிகள் குறித்து ஆய்வு நடத்துவார்கள்.

கரோனா தொற்றுக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும், தமிழக நிலவரம் குறித்தும் முதல்வர் பழனிசாமி, துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைமைச் செயலர் மற்றும் டாஸ்க் ஃபோர்ஸ் தலைவர் சண்முகம், சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் ஆலோசனை நடத்துவார்கள்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x