Last Updated : 07 Jul, 2020 01:14 PM

 

Published : 07 Jul 2020 01:14 PM
Last Updated : 07 Jul 2020 01:14 PM

தமிழகத்திலேயே முதன்முறையாக பெருங்கற்கால உருளை வடிவ ஈமச்சின்ன கல் காளையார்கோவிலில் கண்டுபிடிப்பு

தமிழகத்திலேயே முதன்முறையாக சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே பெருங்கற்கால உருளை வடிவ ஈமச்சின்ன கல் கண்டுபிடிக்கப்பட்டது.

காளையார்கோவில் பகுதிகளில் ஏராளமான தொல்லியல் எச்சங்கள் காணப்படுகின்றன. இலந்தகரை தொல்லியல் ஆர்வலர் ஜெமினிரமேஷ் கொடுத்த தகவலின் அடிப்படையில் காளையார்கோவில் அருகே புரசடைஉடைப்பு கிராமத்தில் பெருங்கற்கால கல்வட்டம், ஈமச்சின்னங்களை காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணை ஆய்வாளர் பரந்தாமன், தொல்லியல் ஆய்வாளர்கள் முருகன், சரவணமணிகண்டன், விக்னேஷ்வரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

ஆய்வில் அப்பகுதியில் பெருங்கற்காலத்தைச் சேர்ந்த ஏராளமான கல்வட்டங்கள், 100-க்கும் மேற்பட்ட முதுமக்கள் தாழிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.

மேலும் தமிழகத்திலேயே முதன்முறையாக உருளை வடிவ ஈமச்சின்ன கல்லும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியதாவது: அக்காலத்தில் இறந்தவர்களை புதைத்தபின்பு கல் வட்டங்கள் வைப்பது வழக்கம். மேலும் முக்கியமானவர்களுக்கு மட்டும் புதைத்த இடத்தை அடையாளப்படுத்துவதற்காக ஈமச்சின்ன கல் வைக்கப்பட்டுள்ளது.

இதுவரை தமிழகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட ஈமச்சின்ன கற்கள் அனைத்தும் சீரற்ற வடிவத்திலேயே இருந்தன. ஆனால் புரசடைஉடைப்பில் ஒரே ஒரு ஈமச்சின்ன கல் மட்டும் உருளை வடிவில் உள்ளது. இந்த கல் 235 செ.மீ. உயரமும், 100 செ.மீ., விட்டமும் கொண்டது. பூமிக்கு வெளியே 55 செ.மீ. தெரிகிறது.

இந்தக் கல்லை நினைவுச் சடங்குகள் நடத்த பயன்படுத்தி இருக்கலாம். மேலும் அக்காலத்தில் முக்கியத்துவம் மிகுந்த நபருக்காக இந்த கல்லை வைத்திருக்கலாம். இதுபோன்ற ஒழுங்கு முறையான ஈமச்சின்ன கல்லை இதுவரை தமிழகத்தில் வேறு எங்கும் கண்டுபிடிக்கவில்லை, என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x