Published : 07 Jul 2020 01:12 PM
Last Updated : 07 Jul 2020 01:12 PM

வீரகேரளம்புதூர் காவல் நிலையத்துக்கு விசாரணைக்காகச் சென்ற இளைஞர் மரணம்: சிபிசிஐடி விசாரணை நடத்துக; மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

கே.பாலகிருஷ்ணன்: கோப்புப்படம்

சென்னை

தென்காசி, வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்கு விசாரணைக்காகச் சென்ற குமரேசன் என்பவர் மரணமடைந்த விவகாரம் தொடர்பாக, சிபிசிஐடி விசாரணை நடத்த வேண்டும் என, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (ஜூலை 7) அவர் வெளியிட்ட அறிக்கை:

"தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூரைச் சார்ந்த குமரேசன் (வயது 25) என்பவர் கடந்த ஜூன் 27-ம் தேதி அன்று திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். வீரகேளம்புதூர் காவல்நிலைய உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோரின் மிருகத்தனமான தாக்குதலின் விளைவாக அவரது இறப்பு நடந்துள்ளது என உயிரிழந்த குமரேசனின் தந்தை நவநீதிகிருஷ்ணன் புகார் அளித்துள்ளார்.

அவர் கூறியுள்ள புகாரில், கடந்த மே 8-ம் தேதி அன்று ஒரு இடப்பிரச்சினை சம்பந்தமாக வீரகேரளம்புதூர் காவல் நிலையத்திற்கு வரச் சொன்னதன் பேரில் குமரேசனும், தானும் காவல்நிலையம் சென்றதாகவும், விசாரணையின்போது காவல் உதவி ஆய்வாளர் சந்திரசேகர், குமரேசனைத் தாக்கியதாகவும் கூறியுள்ளார். பின்னர் மே 10-ம் தேதி அன்று விசாரணைக்காக குமரேசன் தனியாகவே காவல் நிலையம் சென்றபோது, உதவி ஆய்வாளர் சந்திரசேகர், காவலர் குமார் ஆகியோர் தன் மகன் குமரேசனை மிருகத்தனமாகத் தாக்கியுள்ளதாகவும், ஜூன் 10 அன்று குமரேசனுக்கு கடுமையான மூச்சுத்திணறல் ஏற்பட்டதுடன், ரத்த வாந்தியும் எடுத்துள்ள நிலையில் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு ஜூன் 27 அன்று உயிரிழந்துள்ளாதாகவும் தெரிவித்துள்ளார்.

குமரேசனின் இறப்புக்குக் காரணமான காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி பொதுமக்களும், உறவினர்களும் போராட்டத்தில் ஈடுபட்டபோது, அங்கு வந்த மாவட்டக் கண்காணிப்பாளர் சம்பந்தப்பட்ட காவலர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். ஆனால் 174 (3) பிரிவின்கீழ் மட்டும் வழக்குப்பதிவு செய்ததுடன், காவலர்கள் மீது எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினர் சித்ரவதையால் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ள நிலையில் தென்காசியில் விசாரணைக்காகச் சென்றவர், காவல்துறையினரின் தாக்குதலால் உயிரிழந்துள்ளார் என்ற புகார் எழுந்துள்ளது.

எனவே, வீரகேளம்புதூர் போலீஸ் சித்ரவதையால் குமரேசன் உயிரிழந்துள்ளார் என அவரது தந்தை புகார் அளித்துள்ள பின்னணியில், இந்த வழக்கை சிபிசிஐடி விசாரிக்க வேண்டுமெனவும், தவறிழைத்த காவல்துறையினர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.

மேற்கண்ட கோரிக்கையினை வலியுறுத்தி நாளை (ஜூலை 8) தென்காசி மாவட்டம் முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்".

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x