Last Updated : 07 Jul, 2020 11:33 AM

 

Published : 07 Jul 2020 11:33 AM
Last Updated : 07 Jul 2020 11:33 AM

மரக்காணம் அருகே குளத்தினை தூர்வாரிய போது ஆயிரம் ஆண்டுகள் பழமையான 4 அடி உயரமுள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுப்பு

மரக்காணம் அருகே குளத்தினை குடிமராமத்து பணிக்காக தூர்வாரிய போது ஆயிரம் ஆண்டுகள் பழமையான 4 அடி உயரமுள்ள மகா விஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

மரக்காணம் அருகே கரிபாளையம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோயிலில் குளத்தில் குடிமராமத்து பணிகள் கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று (ஜூலை 7) காலை குடிமராமத்து பணி நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, பொக்லைன் மூலம் மண்ணை தோண்டும்போது திடீரென ஒரு சத்தம் கேட்டது.

மேலும், மெதுவாக தோண்டியபோது ஒரு கல் தெரிந்தது. அதை தோண்டி எடுத்து பார்த்தபோது சாமி சிலை போல் தெரிந்தது. உடனடியாக, அப்பகுதி மக்கள் சூழ்ந்து கொண்டனர். பின்பு முழுவதுமாக மண்ணை தோண்டினர். அப்போது, 4 அடி உயரத்தில் உள்ள மகாவிஷ்ணு சிலை கண்டெடுக்கப்பட்டது.

உடனடியாக அப்பகுதி மக்கள் அந்த மகாவிஷ்ணு சிலையை மாரியம்மன் கோயிலில் வைத்து பால் மற்றும் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மேலும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இச்சிலை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு மண்ணில் புதைந்திருக்கலாம் எனவும் கூறுகின்றனர். சிலையில் ஒருபக்கம் கை உடைந்துள்ளது.

இத்தகவல் அறிந்த மரக்காணம் வட்டாட்சியர் ஞானம் அச்சிலையைப் பார்த்து தொல்லியல் துறைக்கு தகவல் தெரிவித்தார்.

பொதுமக்கள் இந்த சிலையை இங்கே வைத்து வழிபட வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர். ஆனால், தொல்லியல் துறை வந்து பார்த்த பின்புதான் அந்த சிலை எங்கு வைப்பது என முடிவு செய்யப்படும் என வருவாய்துறையினர் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x