Published : 07 Jul 2020 07:20 AM
Last Updated : 07 Jul 2020 07:20 AM

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கரோனா தொற்றால் உயிரிழப்பு

கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கரோனா தொற்று பாதிப்பால் நேற்று உயிரிழந்தார்.

சென்னை, அண்ணாநகரில் வசித்து வந்தவர் சுவாமிநாதன்(53). இவர், திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார். சுவாமிநாதன், கடந்த மாதம் 20-ம் தேதி கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தொடர்ந்து,மணப்பாக்கம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேல்சிகிச்சை பெற்று வந்த சுவாமிநாதன், கடந்த 4-ம் தேதி சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், அவர் நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சுவாமிநாதனுக்கு மனைவி மஞ்சுளா, மகன் ஜவகர் பிரசன்னா, மகள் காவ்யா உள்ளனர். திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சுவாமிநாதன் உருவப் படத்துக்கு, கரோனா வைரஸ் தடுப்பு பணிகளுக்கான திருவள்ளூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலரும், நகராட்சி நிர்வாக ஆணையருமான பாஸ்கரன், மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரி மற்றும் கும்மிடிப்பூண்டி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சிவகுமார், ஒன்றிய கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள், ஊழியர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x