Published : 06 Jul 2020 10:05 PM
Last Updated : 06 Jul 2020 10:05 PM

வனவிலங்குப் பாதையை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டிய நபர்: பொதுநல வழக்கில் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் வனவிலங்குப் பாதையை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் மாவட்ட ஆட்சியர் 4 வாரத்திற்குள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சேலத்தைச் சேர்ந்த சேகரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு ஒன்றைத் தொடர்ந்துள்ளார்.

அவரது மனுவில், “நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில உள்ள குஞ்சப்பன் கிராமத்தில், கோயம்புத்தூரைச் சேர்ந்த மோகன் குமார் என்பவர் வனவிலங்குகளுக்கு இடையூறு தரும் வகையில் விலங்குகளின் வழிப்பாதையை மறித்து தனியார் தங்குமிடம் கட்டி வருகிறார்.

இந்தக் கட்டுமானப் பணியை நிறுத்த கடந்த மார்ச் மாதம் மாவட்ட நிர்வாகக் குழு உத்தரவு பிறப்பித்தது. இருந்தும் அந்த உத்தரவை மதிக்காமல் தொடர்ந்து அந்தக் கட்டிடத்தைக் கட்டி வருகிறார்.

மீண்டும் இது தொடர்பாக கட்டிடத்தை இடிக்கக் கோரி மாவட்ட நிர்வாகக் குழுவினரிடம் கடந்த மாதம் மனு கொடுக்கப்பட்டது. அந்த மனு மீது மாவட்ட நிர்வாகம் எந்த உத்தரவும் இதுவரை பிறப்பிக்கவில்லை. வனவிலங்குகளுக்கு இடையூறு தரும் வகையில் சட்டவிரோதமாகக் கட்டப்பட்ட கட்டிடத்தை இடிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் கோரிக்கை வைத்துள்ளார்.

இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

இந்த மனு தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து மாவட்ட ஆட்சியர் நான்கு வார காலத்துக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள், வழக்கை ஒத்திவைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x