Published : 06 Jul 2020 06:41 PM
Last Updated : 06 Jul 2020 06:41 PM

மின் கட்டண வழக்கு; ஊரடங்கு காலத்தில் யூனிட் அளவில் கணக்கிடப்படாது: உயர் நீதிமன்றத்தில் மின் வாரியம் பதில்

சென்னை

மின்சாரச் சட்ட விதிகளின்படி ஊரடங்கு காலத்திற்கு முந்தைய கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படும் என்றும், யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது என்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மின் வாரியம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக, மின் கணக்கீடு செய்யாததால், வீட்டு உபயோகத் தாழ்வழுத்த மின் நுகர்வோர், முந்தைய மாதத்திற்குச் செலுத்திய கட்டணத்தின் அடிப்படையில் கட்டணம் செலுத்தலாம் எனவும், பின்னர் மின்சாரக் கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சாரப் பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாதக் கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையைக் கழித்து விட்டு, மீதத் தொகைக்கு பில் செலுத்த வேண்டும் எனவும் மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

இந்த உத்தரவை ரத்து செய்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் இரு மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் இரு தரப்பும் எழுத்துபூர்வமாக தங்கள் பதிலைத் தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, தற்போது மின் வாரியம் மேற்கொள்ளும் மின் கட்டணக் கணக்கீட்டுப்படி, பொதுமக்கள் கூடுதல் தொகை செலுத்த நிர்பந்திக்கப்படுவதாகக் கூறி, மனுதாரர் ரவி தரப்பில் அதற்கான விளக்க மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதையடுத்து, தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், மின்சாரச் சட்ட விதிகளின்படி, ஊரடங்கு காலத்தின்போது, முந்தைய மின் கட்டணத் தொகையை அடிப்படையாகக் கொண்டு மட்டுமே புதிய மின் கட்டணம் கணக்கிடப்படுமே தவிர ஏற்கெனவே பயன்படுத்தப்பட்ட மின்சார யூனிட் அடிப்படையில் கணக்கிட முடியாது எனத் திட்டவட்டமாக தெரிவித்தார்.

மேலும், ஊரடங்கு காலத்தில் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கி இருந்ததாலும், 18 முதல் 20 மணி நேரங்கள் வரை மின்சாரத்தைப் பயன்படுத்தியதாலும் மின் கட்டணம் அதிகரித்து இருப்பதாகவும் விளக்கமளித்தார்.

இதையடுத்து தமிழக அரசின் விளக்கத்தை எழுத்துபூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஜூலை 8-ம் தேதிக்குத் தள்ளி வைத்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x