Published : 06 Jul 2020 05:42 PM
Last Updated : 06 Jul 2020 05:42 PM

சென்னையில் கரோனாவில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62% ஆக உயர்வு: அமைச்சர் காமராஜ் தகவல்

முதல்வரின் உறுதியான நடவடிக்கையால் கரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்புவோர் எண்ணிக்கை 62 சதவீதமாக உயர்ந்துள்ளது என, தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் காமராஜ் இன்று (ஜூலை 6) கோடம்பாக்கம், காமராஜ் காலனியில் நடைபெற்ற மருத்துவ முகாமை ஆய்வு செய்தார். பின்னர் பொதுமக்களுக்கு முகக்கவசம், கபசுரக் குடிநீர், கையேடு ஆகியவற்றை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து அமைச்சர் காமராஜ் பேசியதாவது:

"தமிழ்நாடு முதல்வர் இந்தியாவில் ஒரு முன்னுதாரணமாக கரோனா தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். தன்னுடைய செம்மையான, உறுதியான நடவடிக்கையின் மூலம் கரோனா தொற்று ஏற்பட்டவர்களில் அதிக எண்ணிக்கையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பிச் செல்கின்ற நிலையை உருவாக்கியிருக்கிறார்.

இதுவரை சென்னை மாநகராட்சியில் 12 ஆயிரத்து 712 காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் 8 லட்சத்து 20 ஆயிரத்து 358 நபர்கள் பயனடைந்துள்ளனர். அதில் 38 ஆயிரத்து 280 பேருக்குத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு உடனுக்குடன் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதால்தான், பாதிக்கப்பட்டவர்களில் 62 சதவீதம் பேர் குணமடைந்து வீடுகளுக்கு திரும்பிச் சென்றிருக்கிறார்கள்.

எங்களைப் போன்ற அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் ஒருங்கிணைந்து 15 மாநகராட்சி மண்டலங்களில் மூன்று மண்டலங்களுக்கு ஒரு அமைச்சர் என்ற வகையில் கரோனா தடுப்புப் பணிகளை நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.

மாநகராட்சியில் தொற்று எண்ணிக்கை குறைந்து கொண்டு இருக்கிறது. உதாரணமாக கோடம்பாக்கம் மண்டலத்தில் 14 நாட்களுக்கு முன்னர் பாதிக்கப்பட்ட தெருக்கள் 2,414 ஆகும். இதில், தற்போது 990 தெருக்கள் பாதிப்பே இல்லாமல் இருக்கிறது. ஒருவருக்குக் கூட தொற்று ஏற்படவில்லை. இவையெல்லாம் முதல்வர் எடுத்த உறுதியான நடவடிக்கையால் ஏற்பட்ட மருத்துவரீதியான வெற்றி.

இந்த மாதம் நியாயவிலைக் கடைகளில் பொருட்களை வாங்க 6, 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் வீடுகளுக்குச் சென்று டோக்கன் வழங்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களுக்கு வேண்டிய அத்தியாவசியப் பொருட்களை 10-ம் தேதி முதல் வாங்கி கொள்ளாலம்.

தமிழகத்தைப் பொறுத்தவரை உணவுப் பற்றாக்குறை என்ற பேச்சுக்கே இடமில்லை. இப்போது கிடங்குகளில் மூன்று மாதத்திற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் உள்ளன".

இவ்வாறு அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x