Last Updated : 06 Jul, 2020 04:08 PM

 

Published : 06 Jul 2020 04:08 PM
Last Updated : 06 Jul 2020 04:08 PM

கடும் நிதி நெருக்கடியிலும் புதுச்சேரியில் அரசு துறைகள் பயன்பாட்டில் 80 வாகனங்கள்; ஆண்டு வாடகை ரூ.4 கோடி நிதி வீணாகும் அவலம்

பிரதிநிதித்துவப் படம்

புதுச்சேரி

கடும் நிதி நெருக்கடியிலும் புதுச்சேரியில் அரசு துறைகளின் பயன்பாட்டில் 80 வாகனங்கள் இருப்பதாக தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் தெரிய வந்துள்ளது. ஆண்டு வாடகை ரூ.4 கோடி செலவிடப்படுவதால் அரசு நிதி வீணாவதாக துணைநிலை ஆளுநர், முதல்வரிடம் மனு தரப்பட்டுள்ளது.

அரசு பணிகளை மேற்கொள்ள துறைகளுக்கு தனியே வாகனங்கள் இருந்து வந்தன. இந்நிலையில், வாகன செலவு, ஓட்டுநர் செலவு, எரிபொருள் செலவு ஆகியவை கூடுதலாவதை கருத்தில் கொண்டு மத்திய அரசு புதியதாக வாகனம் வாங்க கட்டுப்பாடு விதித்து, ஒப்பந்த அடிப்படையில் வாகனங்களை பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அறிவித்தது. இதையடுத்து, கடும் நிதி நெருக்கடியிலும் புதுச்சேரியில் பல துறைகளில் கூடுதலாக ஒப்பந்த வாகனங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கிடைத்த தகவல் தொடர்பாக துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, முதல்வர் நாராயணசாமி ஆகியோரிடம், புதுச்சேரி ராஜீவ்காந்தி மனித உரிமைகள் விழிப்புணர்வு அமைப்பு தலைவர் ரகுபதி இன்று (ஜூலை 6) மனு அளித்துள்ளார்.

அது தொடர்பாக ரகுபதி கூறியதாவது:

"புதுச்சேரி அரசு நிறுவனங்கள் மற்றும் அரசு துறைகளுக்கு 80 ஒப்பந்த வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளது. ஒவ்வொரு வாகனமும் மாதம் ஒன்றுக்கு 3,000 கிலோ மீட்டர் பயன்படுத்த ஆண்டு வாடகையாக ரூ.4 கோடி செலுத்தப்படுகிறது.

புதுச்சேரியில் அனைத்து அரசு அலுவலகங்களும் அருகருகே இருப்பதால் அதிகாரிகள் 20, 25 கிலோ மீட்டர்தான் பயணிக்க வேண்டியிருக்கும். அதிகபட்சம் 50 கிலோ மீட்டருக்கு மேல் பயணிக்கவே வாய்ப்பு இல்லை. எனவே, ஒரு துறையில் பயன்பாட்டில் உள்ள ஒப்பந்த வாகனத்தை அனைத்து அதிகாரிகளும் 'ஷேரிங்' அடிப்படையில் பயன்படுத்த உட்படுத்த வேண்டும்.

அதேபோல், களப்பணியே இல்லாத அதிகாரிகளுக்கு ஒப்பந்த வாகனம் வழங்கப்பட்டுள்ளதை ரத்து செய்ய வேண்டும். இந்த ஒப்பந்த வாகனங்களை ஊரடங்கு காலத்தில் பயன்படுத்தாமல் நிறுத்தி வைத்து வாடகை அளிப்பதிலும் அரசு நிதி வீணடிக்கப்படுகிறது.

காவல்துறையில் 66 அரசு வாகனங்கள் இருக்கும் நிலையில் உயர் அதிகாரிகள் பயன்பாட்டுக்கு 3 ஒப்பந்த வாகனங்கள் உள்ளன. அவர்கள் ஒப்பந்த வாகனத்தில் பயணிக்கும்போது குற்றம் தொடர்பாக பிற அதிகாரிகளிடம் கைப்பேசியில் விவாதிப்பர். அந்த தகவல் ஓட்டுநர் மூலம் வெளிப்பட வாய்ப்பு உள்ளது.

எனவே, காவல்துறையினர் ஒப்பந்த வாகனத்தை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக, ஒவ்வொரு துறைக்கும் 2, 3 ஒப்பந்த வாகனம் இருப்பதை தவிர்த்து, ஒரு துறைக்கு ஒரு வாகனம் என பயன்படுத்தி, நிதி வீணாவதை தவிர்க்க வேண்டும் என்று முதல்வர், ஆளுநரிடம் மனு தந்துள்ளேன்" என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x