Published : 04 May 2014 10:42 AM
Last Updated : 04 May 2014 10:42 AM

27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ்: பள்ளி திறந்ததும் உடனடியாக வழங்க திட்டம்

வரும் கல்வி ஆண்டில் 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளிகள் திறப்பதற்கு முன்பே, இலவச பாஸ் விண்ணப்பங்களை வழங்கவுள்ளதாக போக்குவரத்துத் துறை தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் பள்ளிகளுக்கு தற்போது கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் ஜூன் 2-ம் தேதி திறக்கப்படவுள்ளன. ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகள் திறந்து பல நாட்களுக்குப் பிறகே மாணவர்களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்படுகிறது. இதனால், பள்ளி திறந்ததும் ஒன்றிரண்டு மாதங்கள் மாணவர்கள் காசு கொடுத்துதான் பஸ்ஸில் செல்ல வேண்டியுள்ளது.

இதைத் தவிர்க்க வரும் கல்வியாண் டில் பள்ளிகள் திறக்கும்போதே மாணவர் களுக்கு இலவச பஸ் பாஸ் வழங்க போக்குவரத்துத் துறை திட்டமிட்டுள்ளது. இலவச பஸ் பாஸ் வழங்குவதற்கான விண்ணப்பங்களை பள்ளிக் கல்வித்துறை மூலம் அந்தந்த பள்ளிகளுக்கு வழங்குவதற் கான பணிகள் விரைவில் தொடங்கவுள்ளன.

இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியதாவது:

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பிளஸ் 2 வரை இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் ‘ஸ்மார்ட் கார்டு’ வடிவில் பஸ் பாஸ் வழங்க கொஞ்சம் காலதாமதம் ஏற்பட்டது. மேலும், மாணவர்களின் புள்ளி விவரங்களை சேகரிப்பதும் சிரமமாக இருந்தது.

இந்த ஆண்டில் அதுபோன்ற பிரச்சினை கள் இருக்காது. எனவே, இந்த ஆண்டு மாணவர்களுக்கு சிரமமின்றி இலவச பஸ் பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கான டெண்டர் தற்போது விடப்பட்டுள்ளது. தேர்தல் முடிவுக்குப் பிறகு, டெண்டர் இறுதி செய்யப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்படும்.

பள்ளிகள் திறப்பதற்கு முன்பே சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகள், தலைமை ஆசிரியர்கள் அவர்களின் எல்லைக்குட்பட்ட போக்குவரத்து கழகங்கள் மூலம் விண்ணப் பங்களைப் பெற்றுச் செல்லவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது. விண்ணப்பங்களை வழங்குவது எப்போது என்பது குறித்து அரசு போக்குவரத்து கழகங்களின் அதிகாரி களும், பள்ளி கல்வி அதிகாரிகளும் கூட்டம் நடத்தி பின்னர், அதற்கான தேதியை அறிவிக்கவுள்ளனர்.

பள்ளிகள் திறந்ததும் மாணவர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தால் விரைவில் பஸ் பாஸ் வழங்கப்படும். கடந்த ஆண்டு 25 லட்சம் பேருக்கு பாஸ் வழங்கப்பட்டன. இந்த ஆண்டு 27 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு பஸ் பாஸ் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் இது மேலும் அதிகரிக்கவும் வாய்ப் புள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x