Last Updated : 06 Jul, 2020 07:09 AM

 

Published : 06 Jul 2020 07:09 AM
Last Updated : 06 Jul 2020 07:09 AM

தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவுவதற்காக நபார்டு வங்கி ரூ.1,475 கோடி சிறப்பு கடன்

எஸ்.செல்வராஜ்

சென்னை

ஊரடங்கு காலத்தில் முடங்கியுள்ளவிவசாயிகளின் வாழ்வாதாரத்துக்கு உதவும் வகையில், தமிழகத்துக்கு நபார்டு வங்கி ரூ.1,475 கோடிசிறப்புக் கடன் வழங்கி உள்ளது.

இதுகுறித்து ‘இந்து தமிழ் திசை’ நாளிதழிடம் நபார்டு வங்கி தலைமை பொது மேலாளர் எஸ்.செல்வராஜ் கூறியதாவது:

விவசாயிகள் ஏற்கெனவே வாங்கிய கடனை தற்போது திருப்பி செலுத்த முடியாத நிலை உள்ளது.இதனால், வங்கிகள் பணமின்றி பாதிக்கக் கூடாது என்பதால் தமிழ்நாடு மாநில கூட்டுறவு வங்கிக்கு ரூ.1,000 கோடி, தமிழ்நாடு கிராமவங்கிக்கு ரூ.475 கோடி என தமிழகத்துக்கு நபார்டு வங்கி ரூ.1,475கோடி சிறப்புக் கடன் வழங்கி உள்ளது. சிறு குறு தொழில் நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்களுக்கு கடன் வழங்கும் 2 வங்கிசாரா நிதி நிறுவனங்களுக்கு ரூ.350 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.

உழவர் உற்பத்தி நிறுவனங்கள் மூலம் திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களுக்கு தலா ரூ.15 லட்சம் மதிப்பிலான 2 நடமாடும் ஏடிஎம் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன. கரோனா பரவலால்தடை செய்யப்பட்ட பகுதி மக்கள்இதன்மூலம் பணம் எடுத்து வருகின்றனர். தமிழ்நாடு கிராம வங்கிக்கு 700 கையடக்க (மைக்ரோ) ஏடிஎம் கருவிகள் வாங்க ரூ.1.25 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வங்கி, ஏடிஎம் இல்லாத கிராமங்களுக்கு இது உதவியாக இருக்கும்.

நபார்டு மூலம் பயிற்சி பெற்றசுயஉதவிக் குழுக்கள் முகக் கவசம், கிருமிநாசினி (சானிடைசர்) தயாரித்து விற்க உதவி செய்யப்படுகிறது. சிறு குழுக்கள், உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு தொழில் திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படுகிறது. இப்பயிற்சி முடித்தவர்கள் சொந்தப் பணத்திலோ, கடன் வாங்கியோ தொழில் செய்யலாம். அந்த வகையில், ஊரடங்கு காலத்திலும் 10 பயிற்சி திட்டங்களுக்கு ரூ.16 லட்சம் நிதி வழங்கி அனுமதிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கின்போது உழவர் உற்பத்தி நிறுவனங்கள், சுயஉதவிக் குழுக்கள் மூலம் வீடு வீடாகச் சென்று காய்கறி, பழங்கள் விநியோகம் செய்ய நபார்டு வங்கி உதவிசெய்தது. இதன்மூலம், அவர்களுக்கு வருமானம் கிடைத்தது. ‘இ-நாம்’ இணையதளம் மூலம் கிராமங்களில் விளையும் உணவுப் பொருட்களை விவசாயிகள் வாங்கி விற்பதற்காக, 60 உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது.

நபார்டின் துணை நிறுவனமான நாப்கிசான் பைனான்ஸ் மூலம், நாட்டிலேயே முதல்முறையாக தமிழகத்தில் உழவர் உற்பத்தி நிறுவனங்களுக்கு மூலதனம், கடன் வழங்க ரூ.250 கோடி நிதி வழங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாக, 16 நிறுவனங்களுக்கு ரூ.65 லட்சம் நிதி அனுமதிக்கப்பட்டு, அதில் ரூ.21 லட்சம் மூலதனமாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x