Published : 06 Jul 2020 06:53 AM
Last Updated : 06 Jul 2020 06:53 AM

சென்னையில் ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டாலும் பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம்: காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் வேண்டுகோள்

சென்னை அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே போலீஸார் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணிகளை சென்னை பெருநகர காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் நேற்று பார்வையிட்டார்.

சென்னை

ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டாலும் மக்கள் அவசியமின்றி வெளியே வரவேண்டாம் என சென்னை காவல் ஆணையர் மகேஷ் குமார் அகர்வால் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை அமைந்தகரை, அண்ணா வளைவு அருகே போலீஸார் மேற்கொண்ட வாகனத் தணிக்கை பணியை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால், நேற்று பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

முழு ஊரடங்குக்கு மக்கள்ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டாலும் மக்கள் அவசியத் தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். கட்டாயமாக முகக் கவசம் அணிய வேண்டும். சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்.

சமூக இடைவெளியைக் கடைபிடிப்பது குறித்து வியாபாரிகள் உள்ளிட்டோருடன் சென்னை காவல் மாவட்டத்தில் உள்ள 12காவல் மாவட்ட துணை ஆணையர்கள் ஏற்கெனவே ஆலோசித்துள்ளனர். மாதவரம் பூ, பழ சந்தை, காசிமேடு, சிந்தாதிரிப்பேட்டை மீன்சந்தைகளில் நெரிசலைக் கண்காணிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தடை உத்தரவை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, தேவைப்பட்டால் கடைகளுக்கு சீல் வைக்கப்படும்.

சென்னையில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 1 லட்சத்து 10 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 87 ஆயிரம் வாகனங்களை பறிமுதல் செய்துள்ளோம். இவ்வாறு காவல் ஆணையர் கூறினார்.

கூடுதல் காவல் ஆணையர் ஆர்.தினகரன், போக்குவரத்து இணை ஆணையர்கள் லட்சுமி, ஜெயகவுரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தல்

இதற்கிடையே, வணிகர்கள்கூட்டமைப்பு, தனியார் போக்குவரத்து, ஆட்டோ ஓட்டுநர்கள் சங்கம், கோயம்பேடு காய்கறி, மலர், பழ வியாபாரிகள் சங்கம், பள்ளி மற்றும் வாடகை கார் உரிமையாளர்களுடன் போக்குவரத்து கூடுதல் காவல் ஆணையர் கண்ணன், நேற்று ஆலோசித்தார். பின்னர், அவர்களுக்கு பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கினார்.

ஆட்டோவில் ஓட்டுநர் தவிர்த்து2 பயணிகள் மட்டுமே பயணிக்கலாம். வாடகை, டாக்சி வாகனங்களில் ஓட்டுநர் தவிர்த்து 3 பயணிகளை மட்டுமே ஏற்றிக் கொண்டு சென்னை மண்டலத்துக்குள் இ-பாஸ் இன்றி பயணிக்கலாம்.விமானம், ரயில் பயணிகள் செல்லும் வாகனங்களுக்கு அனுமதி உண்டு.

ஆட்டோ மற்றும் கால்டாக்சிஓட்டுநர்கள் அனைவரும் கண்டிப்பாக முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். வாகனத்தில் சானிடைசர் வைத்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாத பயணிகளை வாகனத்தில் ஏற்றக் கூடாது. மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அறிவுறுத்தினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x