Published : 05 Jul 2020 12:21 PM
Last Updated : 05 Jul 2020 12:21 PM

ஆசிரியர் சங்கத் தலைவர் மீதான ஒழுங்கு நடவடிக்கையை திரும்பப் பெற வேண்டும்; இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

பிரதிநிதித்துவப் படம்

கோவில்பட்டி

ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மீதான பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை கருத்துரிமையைப் பறிக்கும் செயல் என்பதால், அவர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கையைக் கைவிட வேண்டும் என இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் காணொலி வழியாக நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாநில ஒருங்கிணைப்பாளர் ச.மயில் தலைமை வகித்தார். அகில இந்திய துணைத் தலைவர் கே.ராஜேந்திரன், அகில இந்தியச் செயலாளர் கே.பி.ஒ.சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், "2019-20 ஆம் கல்வியாண்டில் 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு (விடுபட்ட பாடங்கள்) பொதுத்தேர்வு ரத்து செய்தல் குறித்து வெளியிட்டுள்ள அரசாணை குறித்து தொலைக்காட்சி மற்றும் பத்திரிகைகளில் கருத்து வெளியிட்டதாக இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் இணைப்பு சங்கங்களான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவரும், தஞ்சாவூர் மாவட்ட மனையேறிப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியருமான மா.ரவிச்சந்திரன், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளரும், திண்டுக்கல் மாவட்டம் நல்லமனார்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமான பி.பேட்ரிக் ரெய்மாண்ட் ஆகியோர் மீது பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டுள்ள ஒழுங்கு நடவடிக்கைகளைக் கைவிட வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறையின் மீது அக்கறை கொண்டு மாணவர்களின் கல்வி நலனைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் சங்கத் தலைவர்கள் தெரிவித்து கருத்துகளை, விமர்சனமாக எடுக்காமல் ஆக்கபூர்வமான ஆலோசனைகளாக எடுத்து, கருத்து சுதந்திரத்தைப் பாதுகாக்கும் வகையில் அவர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும்.

மேலும், கரோனா பேரிடர் மீட்புப் பணிகளில் விருப்பமுள்ள ஆசிரியர்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பள்ளிகள் திறப்பு தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆசிரியர் சங்கப் பிரதிநிதிகளையும் இணைக்க வேண்டும். 11-ம் வகுப்பில் பழைய பாடத்திட்ட நடைமுறையே தொடர வேண்டும்" ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் பக்தவச்சலம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஏ.சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x