Published : 05 Jul 2020 11:50 AM
Last Updated : 05 Jul 2020 11:50 AM

100 சதவீத அபராதத்துடன் லாரிகளுக்கான மாநில சாலை வரி செலுத்த வற்புறுத்தல்; உரிமையாளர்கள் கவலை

தமிழகத்தில் 100 சதவீத அபராதத் தொகையுடன் மாநில சாலை வரி செலுத்த வற்புறுத்துவதால் லாரி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

கரோனா வைரஸ் பரவலை தடுக்க மார்ச் 24-ம் தேதி மாலை முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக பொது போக்குவரத்து முற்றிலும் தடைபட்டது. இதில், சரக்கு லாரிகளின் இயக்கமும் நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, ஏப்ரல், மே மாதங்கள் வரை லாரிகள் இயக்கப்படவில்லை. இந்த காலத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான லாரிகள் மட்டுமே இயங்கின. ஜூன் மாத தொடக்கத்தில் இருந்து இதர லாரிகள் இயக்கப்படுகின்றன. ஆனாலும், பழைய நிலை முற்றிலுமாக திரும்பவில்லை. இதனால் வாகனங்களுக்கான சாலை வரி உள்ளிட்ட வரிகள், காப்பீடு, வாகன உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசு செப்டம்பர் 30-ம் தேதி வரை கால அவகாசம் வழங்கி உள்ளது.

தமிழக அரசு ஏப்ரல், மே, ஜூன் மாதங்களுக்கான சாலை வரியை ஜூன் 30-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும் என அறிவித்திருந்தது. 30-ம் தேதிக்குள் செலுத்தாதவர்கள், ஜூலை மாதம் ஆன்லைனில் வரி செலுத்த முயன்றனர். ஆனால், செலுத்தாத 3 மாதங்களுக்கான சாலை வரிக்கு 100 சதவீத வரியும், அதற்கு அடுத்துள்ள 3 மாதங்களுக்கான சாலை வரியையும் சேர்த்து செலுத்தும் வகையில் வந்துள்ளது. இதனால் லாரி உரிமையாளர்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து, தமிழகம், ஆந்திரா, தெலங்கானா, புதுச்சேரி, கர்நாடகா, கேரளா ஆகிய 6 மாநிலங்களை உள்ளடக்கிய தென்னிந்திய லாரி உரிமையாளர் சங்க உறுப்பினர் பி.கணேஷ்குமார் கூறும்போது, "ஊரடங்கு காரணமாக லாரிகள் இயக்கம் முற்றிலுமாக தடைபட்டது. இது போன்ற சர்வதேச பரவல் காலத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசு வாகனங்களுக்கான அகில இந்திய சாலை வரி உள்ளிட்டவை செலுத்த செப்.30-ம் தேதி வரை அவகாசம் வழங்கி உள்ளது.

கர்நாடகா, குஜராத் ஆகிய மாநில அரசுகள் 2 மாதங்களுக்கான சாலை வரியை தள்ளுபடி செய்துள்ளது. இமாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட் மாநில அரசுகள் 4 மாதங்களுக்கான சாலை வரியை ரத்து செய்துள்ளது.

ஆனால், தமிழக அரசு ஜூன் 30-ம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் வழங்கி இருந்தது. அதன் பின்னர் ஜூலை 1-ம் தேதிக்கு பின்னர் வரி செலுத்த சென்றால் 3 மாதத்துக்கான சாலை வரியும், அதற்கு 100 சதவீத அபராதமும், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் ஆகிய மாதங்களுக்கான வரி ஆகியவற்றை சேர்த்து செலுத்த வேண்டும் என ஆன்லைனில் வருகிறது.

லாரிகளுக்கான சாலை வரி செலுத்த ஆன்லைனில் 100 சதவீத அபராதத்துடன் ரசீது வழங்கப்பட்டுள்ளது.

12 சக்கர லாரிக்கு 3 மாதத்துக்கு ரூ.6,300 சாலை வரி என்றால், அதற்கு 100 சதவீத அபராதம், அடுத்துள்ள 3 மாதங்களுக்கான வரி மற்றும் நிவாரண நிதி ரூ.252 என மொத்தம் ரூ.19 ஆயிரத்து 152 செலுத்த வேண்டும். கடந்த ஒரு மாதத்தில் டீசல் விலை ரூ.11 வரை உயர்ந்து ரூ.78.10 என விற்பனை செய்யப்படுகிறது. டயர் விலை அதிகரித்துள்ளது. சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதே போல், லாரி உரிமையாளர்கள் பல முனைகளில் தாக்குதல்களை சந்தித்து வருகிறோம். இதில், 100 சதவீத சாலை வரி அபராதம் என்றால் எப்படி சமாளிப்பது என்று தெரியவில்லை.

இதனை செலுத்தாவிட்டால் வாகன உரிமம் புதுப்பித்தல், வாகனங்களுக்கு விபத்து நேர்ந்தால் காப்பீடு பெற முடியாது. மேலும், வாகனங்களை இயக்கவே முடியாத நிலை ஏற்படும். எனவே, லாரி உரிமையாளர்கள் நிலையை கருத்தில் கொண்டு அபராதத் தொகையை ரத்து செய்ய வேண்டும். மேலும், சாலை வரி செலுத்த தமிழக அரசு செப்டம்பர் மாதம் வரை கால அவகாசம் வழங்க வேண்டும்" என்றார் அவர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x