தனிமைப் பகுதிகளில் அமைச்சர் ஆய்வு
ஈரோடு மாவட்டம் பவானியை அடுத்த பெரிய மோளபாளையத்தில் 52 வயது பெண்ணுக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பெருந்துறை கரோனா சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் வசித்து வந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்டது. அப்பகுதியில் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் நேற்று ஆய்வு செய்தார்.
அப்போது, ‘வீட்டை விட்டு வெளியேற முடியாமல் தடுப்புக்கள் போட்டுள்ளதால், அவசர அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்து கொள்ள முடிவதில்லை. குழந்தைகளுக்குத் தேவையான பால் கூட கிடைப்பதில்லை’ என அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதி மக்களிடம் பேசிய அமைச்சர், ‘நோய்ப்பரவலைத் தடுத்திடும் வகையில் 14 நாட்களுக்கு இப்பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், இப்பகுதியில் வசிக்கும் மக்களுக்குத் தேவையான காய்கறிகள் மற்றும் பால் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையும் வழங்க ஏற்பாடு செய்வதாகவும் உறுதியளித்தார்.கரோனா நோய்த்தொற்றினைத் தடுக்கும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பவானியை அடுத்த மோளபாளையத்தில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் கே.சி.கருப்பணன், மக்களுக்கு கபசுரக் குடிநீர் பொடி பொட்டலங்களை வழங்கினார்.
