

கரோனா தொற்று காலத்தில் இடநெருக்கடி காரணமாக, பொள்ளாச்சி கிளை சிறையில் சமூக இடைவெளியை கடைபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டு, தொற்று பரவும் அபாயம் நிலவியது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொள்ளாச்சி கிளை சிறையில் உள்ள கைதிகளை, கோவை மத்திய சிறைக்கு இடம் மாற்ற சிறைத் துறை அதிகாரிகள் முடிவு செய்தனர்.
அதன்படி, பொள்ளாச்சி கிளை சிறையில் இருந்து நேற்று முன்தினம் 35 கைதிகளும், நேற்று 34 கைதிகளும் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
இதுகுறித்து சிறைத் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘பொள்ளாச்சி, வால்பாறை பேரூர் சரக காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி உட்பட பல்வேறு குற்ற செயல்களில் கைதானவர்கள், பொள்ளாச்சி கிளை சிறையில் அடைக்கப்படுகின்றனர்.
தற்போது கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படுவதால், அதற்கேற்ப பொள்ளாச்சி சிறையில் போதிய இடவசதி இல்லை. இதனால், கோவை மத்திய சிறைக்கு கைதிகள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்’ என்றனர்.