Published : 04 Jul 2020 05:13 PM
Last Updated : 04 Jul 2020 05:13 PM

பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் உட்பட வேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிடுக: மார்க்சிஸ்ட் வலியுறுத்தல்

வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்கு தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து விவசாயிகள் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் வைத்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“தமிழ்நாட்டில் பெரும்பகுதி மக்களின் வாழ்வாதாரமாக திகழ்வது வேளாண்மையே. இன்றைக்கும் 50 சதமான மக்களுக்கு வேலைவாய்ப்பு அளிப்பதோடு, 100 சதமானம் மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதும் வேளாண்மையே. இயற்கையோடு இணைந்து, சுற்றுச்சூழலையும் பாதுகாத்து, மக்களுக்கு வாழ்வாதாரமாக திகழும் விவசாயத்தை அழித்து கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை லாபத்துக்காகவே பல திட்டங்கள் தமிழகத்தில் தீட்டப்படுகின்றன.

குறிப்பாக, எட்டு வழிச்சாலை, கெயில் எரிவாயு, பெட்ரோலிய குழாய் பதிப்பு, உயர்மின் கோபுரங்கள் அமைத்தல், மீத்தேன், ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டங்கள் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வெறிக்காகவே திட்டமிடப்படுகின்றன. இவைகளை எதிர்த்து பலகட்ட போராட்டங்கள் நடத்தியன் விளைவாக மீத்தேன், ஹைட்ரோ கார்பன் போன்ற திட்டங்கள் கைவிடப்பட்டன. கெயில் திட்டத்தையும் தமிழக அரசு தடை செய்தது.

இருப்பினும், பாரத் பெட்ரோலிய நிறுவனம் கோவை துவங்கி, கர்நாடக மாநிலம் வரை பெட்ரோலியப் பொருட்களை எடுத்துச் செல்வதற்காக ஐடிபிஎல் குழாய் பதிக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இத்திட்டத்தால் திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் விவசாய நிலங்களும், கிராமப்புற வீடுகளும் பாதிக்கும் ஆபத்துள்ளது.

இத்திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என ஏற்கனவே ஆயிரக்கணக்கான மனுக்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இதையும் மீறி கரோனா தொற்று பரவி இருக்கும் இச்சூழ்நிலையில் ஐடிபிஎல் நிறுவனத்தில் சார்பில் கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம் ஆகிய மாவட்டங்களில் கருத்துக் கேட்பு கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கரோனா தொற்றுக் காலத்தை பயன்படுத்தி எப்படியாவது இத்திட்டத்தை நிறைவேற்றிட வேண்டுமென்ற நோக்கோடு இக்கூட்டங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோன்று மேற்கு மாவட்டங்களில் விவசாயிகளின் எதிர்ப்பையும் மீறி உயர்மின் கோபுரங்கள் அமைக்கும் பணிகளும் நடந்து வருகின்றன.

தமிழக அரசின் இந்த நடவடிக்கைகளை வன்மையாக கண்டிப்பதோடு, பெட்ரோலிய குழாய் பதிக்கும் திட்டம் உள்பட வேளாண்மையை அழிக்கும் அனைத்து திட்டங்களையும் கைவிட வேண்டுமெனவும்; ஐடிபிஎல் நிறுவனம் அறிவித்துள்ள கருத்துக் கேட்பு கூட்டத்தையும் உடனடியாக ரத்து செய்ய வேண்டுமெனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசை வலியுறுத்துகிறது.

வளர்ச்சி என்ற பெயரில் கார்ப்பரேட் முதலாளிகளின் லாப வேட்டைக்கு தமிழக விவசாயத்தையும், விவசாயிகளையும் அழிக்கும் நடவடிக்கைகளை எதிர்த்து விவசாயிகள் ஒன்று திரண்டு போராட முன்வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு கே. பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x