Published : 04 Jul 2020 05:11 PM
Last Updated : 04 Jul 2020 05:11 PM

சென்னையில் ஜூலை 6-ம் தேதி முதல் ஊரடங்கில் தளர்வுகள்; என்னென்ன கட்டுப்பாடுகள்?- முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வரும் 6-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளையும் தளர்வுகளையும் அறிவித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக, முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஜூலை 4) வெளியிட்ட அறிக்கை:

"தமிழக அரசு, கரோனா நோய்த் தொற்றிலிருந்து பொதுமக்களைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான நிவாரணங்களை வழங்கி முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. இந்தியா முழுவதும் கரோனா வைரஸ் நோய்த் தொற்றைக் தடுப்பதற்காக தேசிய பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் கீழ் ஊரடங்கு உத்தரவை 25.3.2020 முதல் மத்திய அரசு அமல்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு முழுவதும் ஊரடங்கை அமல்படுத்தியது.

இதைத் தொடர்ந்து, கரோனா தொற்றின் நிலைமையைக் கருத்தில் கொண்டும், மக்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டும், சில தளர்வுகளுடன் வரும் 31-ம் தேதி வரை ஊரடங்கை நீட்டிக்க ஏற்கெனவே உத்தரவிடப்பட்டது.

இருந்தபோதிலும் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், முழு ஊரடங்கு நாளை (ஜூலை 5) வரை அமலில் இருக்க உத்தரவிட்டிருந்தேன். தற்போது, அதாவது, 6-ம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கீழ்க்கண்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன.

பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இயங்கும் உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். தொலைபேசி மூலம் ஆர்டர் செய்து வீடுகளுக்கு உணவு வழங்கும் சேவைகளுக்கு இரவு 9 மணி வரை மட்டும் அனுமதி வழங்கப்படும். அப்பொருட்களை வழங்கும் ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களிடமிருந்து அடையாள அட்டை பெற்று பணியாற்ற வேண்டும்.

தேநீர்க் கடைகள் (பார்சல் மட்டும்) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

காய்கறிக் கடைகள் மற்றும் மளிகைக்கடைகள் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயங்க அனுமதிக்கப்படும்.

வணிக வளாகங்கள் தவிர்த்து, அனைத்து ஷோரூம்கள் மற்றும் பெரிய கடைகள் (நகை, ஜவுளி போன்றவை), ஏற்கெனவே அறிவித்து இருந்த வழிமுறைகளுடன் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை செயல்படலாம்.

மற்ற செயல்பாடுகளைப் பொறுத்தவரை, கடந்த ஜூன் 19-க்கு முன்னர் பெருநகர சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்ட ஊரடங்கில் அனுமதித்துள்ள கட்டுப்பாடுகளுடனும், தளர்வுகளுடனும் இயங்க உத்தரவிட்டுள்ளேன். பொதுமக்கள் அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்".

இவ்வாறு முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x