Published : 04 Jul 2020 04:51 PM
Last Updated : 04 Jul 2020 04:51 PM

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரியில் கரோனா பரிசோதனைக்கு மறுப்பு; அலட்சியத்துடன் அனுப்பப்பட்ட இளைஞருக்குக் கரோனா

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை

திருப்பூர்

கரோனா வைரஸ் தொற்று இருக்கும் என்கிற சந்தேகத்துடன் மருத்துவமனைக்கு வந்தவரை, பரிசோதனைக்கு மறுத்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அலட்சியம் காட்டியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திருப்பூரை சேர்ந்த 30 வயது நிறைந்த நாளிதழ் செய்தியாளர் ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நேற்று (ஜூலை 3) இரவு அனுமதிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2-ம் தேதி மதியம் திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா தொற்று இருக்கும் என்கிற சந்தேகத்தின் பேரில் சென்றுள்ளார்.

அப்போது இவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், "காய்ச்சல் இல்லையா?" என்று கேட்டுள்ளனர். தொண்டை வலி, மூச்சுத்திணறல் மற்றும் உடல் சோர்வு உள்ளது என செய்தியாளர் தெரிவிக்கவே, அவருக்கு எதிர்ப்பு சக்தி மாத்திரைகள் வழங்கி அனுப்பி வைத்துவிட்டனர்.

"கரோனா பரிசோதனை செய்துகொள்கிறேன்" என்று சொன்னபோதும், "அது தேவையில்லை" என மறுத்துவிட்டனர். இந்நிலையில், உடல்நிலையில் மேலும் சந்தேகம் ஏற்படவே, அன்றைய தினம் தானாகவே பல்லடம் அரசு மருத்துவமனை மையத்துக்கு சென்று, சளி பரிசோதனை செய்துள்ளார்.

இதையடுத்து அவர் கடந்த 2 இரண்டு நாட்களாக பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் நேற்று (ஜூலை 3) இரவு, திடீரென அவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, சுகாதார ஆய்வாளர்கள் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து அவர் அன்றிரவு வீட்டில் இருந்து திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகிச்சையில் அலட்சியம்

இது தொடர்பாக அவர் கூறும்போது, "கடந்த 2-ம் தேதி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்தேன். ஆனால், உரிய சிகிச்சை தரவில்லை. சந்தேகத்தின் பேரில்தான் இங்கு வந்தேன். இங்கு எதிர்ப்பு சக்தி மாத்திரைகளை வழங்கி அனுப்பி வைத்தது, மிகுந்த ஏமாற்றம் அளித்தது.

கரோனா வைரஸ் தொற்றுக்கான பரிசோதனையை மேற்கொள்ள மறுத்துவிட்டனர். என்னைப் போல் பலரும் இதேபோல் சோதனைக்கு உட்படுத்தப்படாமல், அனுப்பி வைக்கப்பட்டிருப்பார்களோ என்கிற சந்தேகம் எழுகிறது.

இன்றைக்கு மிக மிக கவனத்துடன் அணுக வேண்டிய ஒரு பிரச்சினையை மேம்போக்காக கையாள்வதாக தெரிகிறது. என்னைப் போல் சிகிச்சைக்கு வந்த பலரும் அனுப்பி வைக்கப்பட்டிருந்தால், இவர்கள் மூலம் சமூகத் தொற்றுக்கு வழிவகுக்கும். இதில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.

எனது குடும்பத்தில் 5 பேருக்குப் பரிசோதனை செய்ய வேண்டும். பாட்டியின் உடல்நிலை காரணமாக அவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வர முடியாது. ஆகவே, அவர்களுக்கான கரோனா பரிசோதனைகளையும் தாமதமின்றி உடனடியாக செய்து தர வேண்டும்" என்றார்.

திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் வள்ளி 'இந்து தமிழ்' செய்தியாளிடம் கூறும்போது, "என்னுடைய கவனத்துக்கும் கொண்டு வரவில்லை. எனக்குத் தகவல் அளித்திருந்தால் கரோனா தொற்றுக்கான பரிசோதனை எடுத்திருப்போம். கரோனா தொற்று உள்ளவருடன் பழகிய அனைவரது நடவடிக்கைகளையும் கண்காணித்து பரிசோதனை செய்கிறோம்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x