

பள்ளிகளில் சத்துணவு உண்ணும் குழந்தைகளுக்கு உணவு பொருட்களாக வழங்காமல் மற்ற மாநிலங்கள் போல் சமைத்த சூடான சத்துணவை பள்ளிகளிலேயே வழங்க நடவடிக்கை எடுக்க தமிழக அரசை தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு முதல்வருக்கு கடிதம் மூலம் வைக்கப்பட்ட வேண்டுகோள்:
“தமிழகம் முழுவதும் சத்துணவு உண்ணும் மாணவ மாணவிகளுக்கு பள்ளி செயல்படாத நாட்களுக்கு சத்துணவுக்கு உரிய அரிசி மற்றும் பருப்பு வகைகளை உணவுப் பொருள்களாக வழங்குவதற்கு தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலோட்டமாக இது மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் வரவேற்கக் கூடியதாக தான் தோன்றும். ஆனால் நடைமுறையில் இந்த யோசனை தவிர்க்கப்பட வேண்டியது ஆகும். அங்கன்வாடி குழந்தைகள் முதல் உயர்நிலைப் பள்ளி வரை அனைத்து குழந்தைகளுக்கும் தினமும் சமைத்த சூடான சத்துணவு அதற்குரிய முட்டையும் வழங்குவதுதான் சரியானது. சிறந்தது.
இதனைநடைமுறைப்படுத்த சிரமங்கள் தோன்றலாம். அரசு நினைத்தால் முடியும் என்பதே உண்மை. தற்போது கொரோனா நோயைக் கண்டு பதற்றம், பயம் ஏற்பட்டு நோய் தடுப்புக்காக உலகமே ஊரடங்கு பின்னால் சென்று கொண்டிருக்கிறது. இந்த சூழ்நிலையில் எல்லா பணி களிலும் முடக்கம், சிரமம் ஏற்பட்டுள்ளது. அதில் பள்ளிகள் மூடப்பட்டதால் சத்துணவும் மார்ச் 17 முதல் நிறுத்தப்பட்டது.
மறைந்த முன்னாள் முதல்வர் எம் ஜி ஆர், குழந்தைகள் படிக்க பள்ளிக்கு வருகை அதிகரிக்க வேண்டும் என்று சத்துள்ள காய்கறிகள் மற்றும் புரதச்சத்துள்ள பருப்புடன் கொண்ட சமைத்த சூடான சாம்பார் சாதம் வழங்கி பிள்ளைகள் ஆரோக்கி லயத்துடன் வளர, பல எதிர்ப்புகளுக்கு இடையேயான பள்ளிகளில் சத்துணவு வழங்குவதை நிறைவேற்றினார்.
1982 இல் துவக்கப்பட்ட இத்திட்டம் 38 ஆண்டுகளாக சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஒரு குழந்தை பள்ளிக்கு சென்றால் தினமும் மதியம் பல்வகை சத்துணவும் அத்துடன் ஒரு முட்டை, உருளைக்கிழங்கு, பச்சைப் பயறு, கொண்டைக் கடலை, வாழைப்பழம் வரை தரப்பட்டு சாப்பிட்டு வருகின்றனர்
கரோனா நோய் பரவல் காரணமாக மார்ச் 17 முதல் இன்று வரை சத்துணவு நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அரசு மாற்று வழி மூலம் சத்துணவு வழங்கியிருக்க வேண்டும். தவறிவிட்டது
சுமார் 65 லட்சம் பள்ளிக் குழந்தைகள் சத்துணவு இன்றி பரிதவிக்கின்றனர். நோய் தொற்று பரவாமல் இருக்க ஊட்டச் சத்தும் நோய் எதிர்ப்பு சக்தியும் அவசியம் என்பது இன்றுள்ள சூழலில் தேவை. ஊட்டச்சத்து பாதிப்போடு கூடிய ஒரு தலை முறையையே உருவாக்குவதற்கு இது இட்டுச் செல்லும்.
அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, ஆந்திரா உட்பட 10 மாநி லங்களில் மதிய உணவு ஏற்பாடு செய்யப்படுகிறது. இந்தியா விலேயே சத்துணவிற்கு பெயர் பெற்றதும், அரசுக்கு நற்பெயர் பெற்று கொடுத்த தமிழ்நாட்டிலும் இப்போதும் சூடான,சமைத்த உணவு வழங்குவது சாத்தியமானதுதான்
மேலும் சத்துணவு சமைக்க அரசு தற்போது வழங்க உத்தே சித்துள்ள இந்த உரிய உணவீட்டு அளவு கொண்டு அந்த குடும்பத்தில் அந்த குழந்தைக்கு சத்துணவு, முட்டை ஆகியவை தினமும் வழங்க முடியாது. உத்தரவாதமும் இல்லை
எனவே தமிழக முதல்வர் சத்துணவுக்குரிய உணவுப்பொருள்களை தராமல், அந்தந்த ஊரில் பள்ளிகள் மூலம் அந்த ஊரில் உள்ள படிக்கும் மாணவ மாணவியர்களுக்கு சமைத்த சூடான சத்துணவு தினமும் வழங்கிட வேண்டும். அதை மூடப்பட்ட பாத்திரங்கள் மூலம் டிபன் பாக்ஸ் )பெற்றுச் சென்று உணவருந்தவும் செய்யலாம்
மேலும் அதே சமயம் தனிமனித இடைவெளி, முகக்கவசம் கையுறை கிருமி நாசினி தெளிப்பு போன்ற அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து சத்துணவு வழங்கிட அரசு உத்தரவாதப்படுத்த வேண்டும்
இதில் தமிழக முதல்வர் தனிக் கவனம் செலுத்த வேண்டும் தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கேட்டுக்கொள்கிறது”.
இவ்வாறு தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.