Last Updated : 12 Sep, 2015 12:55 PM

 

Published : 12 Sep 2015 12:55 PM
Last Updated : 12 Sep 2015 12:55 PM

இன்று மகாகவியின் நினைவு நாள்: பாரதியின் தந்தை நடத்திய ஆலை கட்டிடம் பாரம்பரிய சின்னமாக பராமரிக்கப்படுமா?

மகாகவி பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் எட்டயபுரத்தில் நடத்திய தொழிற்சாலை கட்டிடங்கள் சிதிலமடைந்து கிடக்கின்றன. பாரதியின் வரலாற்றுடன் தொடர்புடைய இந்த கட்டிடங்களை பாரம்பரிய சின்னமாக பராமரிக்க வேண்டும் என வரலாற்று ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரத்தில் பாரதியார் பிறந்த இல்லம் மற்றும் அரசு சார்பில் கட்டப்பட்ட மணிமண்டம் ஆகியவை அவரது புகழை பறைசாற்றிக் கொண்டிருக்கின்றன. ஆனால் பாரதியின் வரலாற்றோடு தொடர்புடைய ஒரு கட்டிடம் சிதிலமடைந்து, கிடக்கிறது. இன்று பாரதியின் நினைவு தினம் கடைபிடிக்கப்படும் வேளையில், இக்கட்டிடத்தை பாரம்பரிய சின்னமாக பரமாரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

பங்கு திரட்டினார்

`தி இந்து’ நாளிதழிடம், வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் கூறியதாவது:

பாரதியின் தந்தை சின்னச்சாமி ஐயர் எட்டயபுரம் அருகே பிதப்புரம் என்ற கிராமத்தில் பருத்தி அரைக்கும் ஜின் பாக்டரியை நிறுவினார். 1892-ம் ஆண்டு பிப்ரவரி 6-ம் தேதி எட்டயபுரம் காட்டன் ஜின் பாக்டரி (லிமிடெட்) என்ற பெயரில் அந்த ஆலையை கம்பெனி சட்டத்தின் கீழ் பதிவு செய்தார்.

இந்த ஆலையை நிறுவ, ஒரு பங்குக்கு ரூ. 100 வீதம் சுதேசி தொழிலில் ஆர்வமுள்ளவர்களிடம் 198 பங்குகளை விற்று மூலதனம் திரட்டினார். கம்பெனியின் நிர்வாகச் செயலாளராக சின்னச்சாமி ஐயரே செயல்பட்டார். ஏ.எஸ்.அப்பாசாமி, கவிராஜ ஈஸ்வரமூர்த்தியா பிள்ளை, காந்தி தத்துவ பாண்டியாஜியார், டி.சபாபதி பிள்ளை, நெல்லையப்ப பிள்ளை, எஸ்.ஜி.முத்துசாமி ஐயர் ஆகியோர் இயக்குநர்களாக இருந்தனர்.

அந்நியரால் சிதைந்தது

அந்நிய நாட்டினரால் தூத்துக்குடி போன்ற நகரங்களில் பஞ்சாலைகள் தொடங்கப்பட்டன. அந்நிய மூலதனத்தின் ஏகபோக தொழிலால் சுதேசி பருத்தி அரவை ஆலைகள் நொடிந்தன. அவற்றில் சின்னச்சாமி ஐயரின் ஜின் பாக்டரியும் ஒன்று.

பாரதி உருக்கம்

இதுபற்றி பாரதி தனது சுயசரிதையில், `ஆங்கிலேயர் செய்த சதியால் என் தந்தை பொருள் இழந்து மரணமடைந்துவிட்டார்’ என தெரிவித்துள்ளார். பாரதியின் படிப்பும் பாதித்தது. நான் ஏன் பிறந்தேன்? என்று வெறுக்கும் அளவுக்கு பாரதி மனம் நொந்தார். எனவே, பாரதியின் சொந்த வாழ்வில் ஏற்பட்ட கசப்பான அனுபவம் ஆங்கிலேயரை அவர் வெறுப்பதற்கு அடிப்படை யாகிவிட்டது.

சிதிலமடைந்த கட்டிடம்

எட்டயபுரத்தில் இருந்து 3 கி.மீ. தொலைவில் பிதப்புரம் கிராமத்தில் சிதிலமடைந்த நிலையில் இந்த ஆலை உள்ளது. சுவர்கள் இடிந்து, வேலிக்கருவை மரங்கள் சூழ்ந்து பாழடைந்து கிடக்கிறது.

பாரதியின் வரலாற்றோடு நெருங்கிய தொடர்பு கொண்டது இக்கட்டிடம். பாரதி வரலாற்றை எதிர்கால தலைமுறையினர் அறிந்து கொள்ள இதனை பாதுகாக்க வேண்டியது நமது கடமை.

சிதிலமடைந்த ஜின் பாக்டரி கட்டிடங்களை சுற்றி வேலி அமைத்து, தொன்மையான இடங்கள் மற்றும் பொருட்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் இதனை பாதுகாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார் அவர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x