Last Updated : 04 Jul, 2020 12:43 PM

 

Published : 04 Jul 2020 12:43 PM
Last Updated : 04 Jul 2020 12:43 PM

புதுச்சேரியில் ஒரே நாளில் 80 பேருக்கு கரோனா தொற்று உறுதி; மேலும் ஒருவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்வு

புதுச்சேரியில் இன்று ஒரே நாளில் 80 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 900-ஐத் தாண்டியுள்ளது. மேலும், இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்தார்.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூலை 4) புதிதாக 80 பேருக்குக் கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 904 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 485 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

இதுகுறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறும்போது, "புதுச்சேரி மாநிலத்தில் 480 பேருக்குப் பரிசோதனை செய்ததில் புதுச்சேரியில் 76 பேர், காரைக்காலில் 2 பேர், ஏனாமில் 2 பேர் என மொத்தம் 80 பேருக்குத் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் 40 பேர், பெண்கள் 40 பேர் ஆவர். 18 வயதுக்கு உட்பட்டோர் 4 பேரும், 18 வயது முதல் 60 வயதுக்குட்பட்டோர் 64 பேரும், 60 வயதுக்கு உட்பட்டோர் 12 பேரும் அடங்குவர். புதுச்சேரியில் கடந்த 105 நாட்களில் இது 2-வது அதிகபட்ச பாதிப்பாகும்.

மேலும், புதுச்சேரி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த 53 வயது மதிக்கத்தக்க நபர் கடந்த 1 ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டார். 2 ஆம் தேதி அவருக்குத் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில், அவருக்குக் காய்ச்சல், மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு மாற்றப்பட்டார். கரோனா தொற்று தாக்கத்தால் சிகிச்சை பலனின்றி நேற்று (ஜூலை 3) அவர் உயிரிழந்தார். அவருக்கு உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய் எதுவும் இல்லை. ஆனால் புகை பிடிக்கும் பழக்கம் மட்டும் இருந்தது.

கரோனா வயதானவர்களை மட்டுமல்ல 50 வயது மதிக்கத்தக்க நபர்களுக்கும் உயிரிழப்பை ஏற்படுத்தும். எனவே, அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். புதுச்சேரி மாநிலத்தில் இதுவரை 904 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவற்றில் தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 279 பேர், ஜிப்மரில் 132 பேர், கோவிட் கேர் சென்டரில் 30 பேர், காரைக்காலில் 28 பேர், ஏனாமில் 4 பேர், மாஹேவில் 8 பேர், பிற பகுதியில் 4 பேர் என மொத்தம் 485 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று மட்டும் கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 14 பேர், ஜிப்மரில் 2 பேர், கோவிட் கேர் சென்டரில் 2 பேர், காரைக்காலில் 3 பேர் என மொத்தம் 21 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணமடைந்தோர் எண்ணிக்கை 405 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதுவரை 19 ஆயிரத்து 560 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. இதில் 18 ஆயிரத்து 375 பரிசோதனைகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளது. 296 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளது" எனத் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x