சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு: காவலர் முத்துராஜ் சிறையில் அடைப்பு

தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக காவலர் முத்துராஜை ( சிகப்பு சட்டை அணிந்திருப்பவர்)  சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர். படம் : என்.ராஜேஷ்
தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் ஆஜர்படுத்துவதற்காக காவலர் முத்துராஜை ( சிகப்பு சட்டை அணிந்திருப்பவர்) சிபிசிஐடி போலீசார் அழைத்து வந்தனர். படம் : என்.ராஜேஷ்
Updated on
1 min read

சாத்தான்குளத்தில் போலீஸ் தாக்கியதில் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்ட காவலர் முத்துராஜ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் கொலை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கு தொடர்பாக சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றிய ஆய்வாளர் ஸ்ரீதர், உதவ ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகிய 4 பேரும் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கில் தொடர்புடைய காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீசார் கடந்த 2 நாட்களாக தீவிரமாக தேடி வந்தனர்.

இந்நிலையில் விளாத்திகுளம் அருகே உள்ள பூசனூரில் பதுங்கி இருந்த காவலர் முத்துராஜை போலீசார் நேற்று இரவு 9 மணியளவில் கைது செய்தனர்.

இதையடுத்து தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட முத்துராஜிடம் சிபிசிஐடி போலீசார் இரவு முழுவதும் விசாரணை நடத்தினர்.

பின்னர் இன்று காலை 7 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர். தொடர்ந்து முத்துராஜ் தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா முன்னிலையில் அவரது வீட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை ஜுலை 17-ம் தேதி வரை காவலில் வைக்க தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா உத்தரவிட்டார். அதன் பேரில் அவர் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in