Published : 04 Jul 2020 07:18 AM
Last Updated : 04 Jul 2020 07:18 AM

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஒரேநாளில் 330 பேருக்கு கரோனா பாதிப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 330 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும் தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏற்கெனவே கரோனா பாதிப்பு 5,805 ஆக இருந்தது. நேற்று மேலும் 330 பேருக்கு பாதிப்புஉறுதியானது. எனவே, இம்மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 6,139 ஆக உயர்ந்தது. இவர்களில் 106 பேர் உயிரிழந்துள்ளனர். 3,113 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பிவிட்டனர்.

இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,151 ஆக இருந்தது. நேற்று மேலும் 121 பேருக்கு தொற்று ஏற்பட்டது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 2,272 ஆக உயர்ந்தது. இவர்களில் 925 பேர் குணமடைந்துள்ளனர். 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் நேற்றுமுன்தினம் வரை 4,163 பேர் பாதிக்கப்பட்டிருந்தனர். நேற்று 172 பேருக்கு புதிதாக பாதிப்பு உறுதியானது. இதனால், வைரஸ்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4,343 ஆக உயர்ந்துள்ளது. இவர்களில் 2,793 பேர் குணமடைந்தனர். 82 பேர் உயிரிழந்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஏற்கெனவே 2,031 பேர் பாதிக்கப்பட்டிருந்தநிலையில், நேற்று மேலும் 151 பேர் பாதிக்கப்பட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்து பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2,182-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை இங்கு 12 பேர் உயிரிழந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x