Published : 03 Jul 2020 10:58 PM
Last Updated : 03 Jul 2020 10:58 PM

சாத்தான்குளம் வழக்கு: சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்ட காவலர் முத்துராஜ் விளாத்திகுளம் அருகே கைது

உள்படம்: காவலர் முத்துராஜ்

கோவில்பட்டி

சாத்தான்குளம் தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் சிபிசிஐடி போலீஸாரால் தேடப்பட்டு வந்த காவலர் முத்துராஜ் விளாத்திகுளம் அருகே இன்று இரவு கைது செய்யப்பட்டார்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58), அவரது மகன் பென்னிக்ஸ்(31). ஆகியோர் கடந்த 19-ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர். உடல்நலக்குறைவால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 22-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ், 23-ம் தேதி அதிகாலை ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், சிபிஐ விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் இரவு தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சாத்தான்குளத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ரகு கணேசன் கைது செய்தனர்.

இதற்கிடையே நேற்று காலை ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதியில் உள்ள காவலர் முத்துராஜ் உறவினர் வீடுகளில் போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.

கயத்தாறு சுங்கச்சாவடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இன்று காலை காவலர் முத்துராஜை தேடப்படும் நபராக சிபிசிஐடி போலீஸார் அறிவித்தனர். இரவு 9 மணிக்கு விளாத்திகுளம் காவல் துணை கண்காணிப்பாளர் பீர் முகைதீன் தலைமையிலான போலீஸார் பூசனூர் கிராமத்தில் பதுங்கி இருந்த காவலர் முத்துராஜை சுற்றி வளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை பலத்த பாதுகாப்புடன் தூத்துக்குடிக்கு அழைத்துச் சென்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x