Published : 03 Jul 2020 06:47 PM
Last Updated : 03 Jul 2020 06:47 PM

புதுக்கோட்டை சிறுமி கொடூரக் கொலை: தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரிப்பு:   மார்க்சிஸ்ட் கண்டனம்

சென்னை

தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மிருகத்தனமான இத்தகைய மோசமான சம்பவங்கள் மனித நாகரிகத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது என புதுக்கோட்டை சிறுமி கொடூரக் கொலை குறித்து கே.பாலகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் அருகே 7 வயது தலித் சிறுமி பாலியல் வன்கொடுமையால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இந்தக் கொடூரச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதே நேரத்தில் இது கூட்டுப் பாலியல் படுகொலையாக இருக்கலாம் என உறவினர்கள் சந்தேகிக்கின்றனர். இதுகுறித்தும் விசாரணை செய்து காவல்துறை விரைந்து அனைவரையும் கைது செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் அதிகரித்துக் கொண்டே இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியதாகும். மிருகத்தனமான இத்தகைய மோசமான சம்பவங்கள் மனித நாகரிகத்தைக் கொச்சைப்படுத்துவதாக உள்ளது.

அரசும், சமூக இயக்கங்களும் இத்தகைய அநாகரிகமான நடவடிக்கைகளை எதிர்த்து உரிய விழிப்புணர்வினையும், மனிதப் பண்புகளைப் பாதுகாப்பதற்கான இயக்கங்களையும் மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறோம்”.

இவ்வாறு பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x