

தமிழகத்தில் காவல்துறையினருக்கு மன அழுத்தத்தை போக்கும் போலீஸார் நல்வாழ்வு திட்டத்தை 5 ஆண்டுக்கு தொடரவும், அதற்கு தேவையான நிதியை ஒதுக்கவும் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளத்தைச் சேர்ந்த தந்தை, மகன் கோவில்பட்டி கிளைச் சிறையில் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் போலீஸாருக்கு மன அழுத்தத்தை போக்க கவுன்சலிங் வழங்க பெங்களூருவில் உள்ள மனநல மருத்துவமனையான நிமான்ஸ் உடன் இணைந்து போலீஸ் நல்வாழ்வு திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும், இந்த திட்டத்துக்கு ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கரோனா தொற்று காரணமாக தற்போது கவுன்சலிங் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாகவும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
போலீஸாருக்கு மன அழுத்தத்தை போக்குவதற்கான கவுன்சலிங்கை இடையில் நிறுத்துவதை ஏற்க முடியாது. ஏனெனில் போலீஸார் உளவியல், உடல் ரீதியாகவும், நன்னெறிகளை பின்பற்றுவதிலும் உறுதியாக இருந்தால் மட்டுமே பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும். இவற்றில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்படும்பட்சத்தில் அது சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்கும்.
ஒரு சில போலீஸாரின் நடவடிக்கை இந்த கரோனா தொற்று காலத்தில் முன்னணியில் பணிபுரியும் 125 போலீஸார் மீது களங்கத்தை உருவாக்கியுள்ளது. ஜெயராஜ், பென்னிக்ஸ் ஆகியோர் உயிரிழப்பில் தொடர்புடையவர்கள் யாரும் தப்பிவிடக்கூடாது என்பது ஒரு பக்கம் இருந்தாலும், இனிமேல் ஜெயராஜ், பென்னிக்ஸ் போல் ஒரு சம்பவம் நடைபெறாமலும் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அதற்கு போலீஸ் நல்வாழ்வு திட்டங்கள் உதவும். எனவே தமிழகத்தில் பெங்களூர் நிமான்ஸ் மருத்துவமனையுடன் இணைந்து மேற்கொள்ளும் போலீஸார் நல்வாழ்வு திட்டங்களை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடர வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு ஒதுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.
பின்னர் விசாரணையை நீதிபதிகள் ஜூலை 9-க்கு ஒத்திவைத்தனர்.
ராஜாசிங் விவகாரம்:
பென்னிக்ஸ், ஜெயராஜ் போலவே போலீஸாரால் தாக்கப்பட்டு ராஜாசிங் என்பவர் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுபடுவது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட நீதிபதி விசாரிக்க உயர் நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டுள்ளது.
தற்போது இந்த சம்பவம் தொடர்பாக 156 (3) பிரிவில் வழக்கு பதிவு செய்யவும், அந்த வழக்கை தூத்துக்குடி டி.எஸ்.பி, மாவட்ட எஸ்.பிக்கு மாற்ற வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.