Published : 02 Jul 2020 06:50 PM
Last Updated : 02 Jul 2020 06:50 PM

மதுரையில் கரோனா பரவலுக்கு வித்திட்ட பரவை; மருத்துவமனைக்கு செல்லாமல் உலவும் நோயாளிகள்: அச்சத்தில் மக்கள் 

மதுரையில் கரோனா தொற்று பரவலுக்கு காரணமான பரவைப்பகுதியில் நோய்த்தொற்று வந்த நோயாளிகளை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கவும், அவர்கள் மூலம் மற்றவர்களுக்கு பரவுவதைத் தடுக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில் உள்ள பெரிய காய்கறி சந்தைகளில் மதுரை அருகே பரவையில் உள்ள ஒருங்கிணைந்த காய்கறி சந்தை முக்கியமானது. இந்த சந்தைக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்து மட்டுமில்லாது வடமாநிலங்களில் இருந்தும் தினமும் லாரிகளில் காய்கறிகள் விற்பனைக்கு வருகிறது.

நாள் ஒன்றுக்கு ரூ.15 கோடி அளவுக்கு வர்த்தகம் நடக்கிறது. இந்தியாவிலேயே கரோனா பரவல் அதிகமுள்ள மகாராஷ்ட்டிராவில் இருந்து கடந்த மாதம் மத்தியில் வெங்காயம், உருளைக்கிழங்கு மூட்டைகளை ஏற்றிக் கொண்டு பல லாரிகள் மதுரை பரவை சந்தைக்கு வந்துள்ளன.

இதில் வந்த டிரைவர்கள், லோடுமேன்கள் மூலம் மதுரை பரவை சந்தை வியாபாரிகளுக்கு கரோனா பரவியது. அதில், 25 வியாபாரிகளுக்கு இந்த தொற்று பரவியது கண்டறியப்பட்டது.

அதனால், கடந்த ஜூன் 15ம் தேதி இந்த பரவை சந்தையை மாவட்ட நிர்வாகம் மூடியது. ஆனால், அதற்குள் இந்த சந்தையில் காய்கறி வாங்கிய சில்லறை வியாபாரிகள் மூலம் மதுரை மாநகராட்சிப்பகுதியில் இந்த தொற்று நோய் வேகமெடுத்தது.

சென்னைக்கு கோயம்பேடு மார்க்கெட் போல் மதுரை மாநகராட்சிப்பகுதிகளில் இந்த தொற்றுநோயின் சமூக பரவலுக்கு பரவை காய்கறி மார்க்கெட் முக்கிய காரணமாகிவிட்டது. அதன்பிறகாவது மாவட்ட நிர்வாகம் முழித்துக் கொள்ளுமா? என்று பார்த்தால் தற்போது வரை, பரவை பகுதியில் ‘கரோனா’ தொற்று பரவலைத் தடுக்க மாநகராட்சியை போல் முக்கியத்துவம் கொடுத்து தொடர்ச்சியான நடவடிக்கை எடுக்கவில்லை.

பரவை சந்தையில் வேலைப்பார்த்த தொழிலாளர்கள் மூலம் இந்த தொற்று நோய் சுற்றுவட்டார கிராமங்களில் பரவியது. அதை கட்டுப்படுத்தவும், மக்களிடம் ஏற்பட்டுள்ள அச்சத்தை போக்கவும் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. அதனால், இந்த தொற்று நோய் மதுரை புறநகர் கிராமங்களில் மாநகராட்சியைப்போல் சமூகப்பரவல் ஆகும் அபாயம் உள்ளது.

இதுகுறித்து பரவை பகுதி மக்கள் கூறியதாவது:

பரவை மார்க்கெட்டில் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமானோர் வேலை பார்த்தனர். அவர்கள் அனைவருக்கும் பரிசோதனை செய்யவில்லை.

அதனால், தற்போது இந்த நோய் மெல்ல மெல்ல பரவை பேரூராட்சி குடியிருப்பு பகுதிகள், மீனாட்சி மில் காலனி, சத்தியமூர்த்தி நகர், பவர் ஹவுஸ், மார்க்கெட் செயல்பட்ட சுற்றுவட்டார விரிவாக்கப்பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளது.

நோய்த் தொற்று கண்டறியப்பட்டவர்களையும், அவர்கள் வசிக்கும் பகுதிகளையும் சுகாதாரத்துறை தடுப்பு ஏற்படுத்தி அடையாளப்படுத்தவில்லை. அவர்களில் பலர் மருத்துவமனையில் சென்று சிகிச்சைப்பெறாமல் ஊரிலே உலாவுகின்றனர்.

இப்பகுதி மக்கள் அச்சத்தை போக்க வேண்டிய மாவட்ட நிர்வாகத்தின் கடமை. நோய் தொற்று அதிகமாக இருப்பதாலே மதுரை மாநகராட்சியுடன் சேர்த்து பரவை பேரூராட்சிப்பகுதிக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

அதனால், மாநகராட்சியைப் போல் பரவை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களில் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களை வெளியே நடமாட விடாமல் மருத்துவமனையில் சிகிச்சை பெற ஏற்பாடு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x