Published : 02 Jul 2020 02:04 PM
Last Updated : 02 Jul 2020 02:04 PM

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகளுடன் கரோனா வகைப்படுத்துதல் மையம் திறப்பு

தாம்பரத்தில் வகைப்படுத்துதல் மையத்தைத் திறந்து வைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், பொதுமக்கள் அச்சமின்றி இருக்கலாம். அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது என்று தெரிவித்தார்.

தாம்பரத்தில் இன்று செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் பேசியதாவது:

“108 ஆம்புலன்ஸில் அழைத்துவரப்படும் நோயாளிகளுக்கு இசிஜி உட்பட 8 வகை சோதனைகள் செய்யப்படும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக எக்ஸ்ரே எடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சோதனையில் கரோனா தொற்று இருப்பவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிறிய அளவில் தொற்று உள்ளது, வீட்டுத் தனிமையில் செல்கிறேன் என்றால் நீண்டகால நோய் இல்லாமல் இருந்தால், வேறு ஏதேனும் இணை நோய்கள் இல்லாமல் இருந்தால், வீட்டில் தனிமைப்படுத்த தனி அறை இருக்கிறது என்றால் மருத்துவர்கள் அவர்களுக்குத் தேவையான மருந்துகள் வழங்கி தனிமையில் இருக்க ஏற்பாடு செய்து கொடுப்பார்கள்.

தாம்பரத்தில் தற்போது திறக்கப்பட்ட இந்த மையத்தில் 500 படுக்கை வசதிகள் உள்ளன. அதில் 300 படுக்கைகளில் ஆக்சிஜன் வசதி உள்ளது. ஏனென்றால் ஆக்சிஜன் வசதி மிக முக்கியம். உலக சுகாதார நிறுவனம் உள்ளிட்ட பலரும் நம்மைப் பாராட்டுகிறார்கள்.

ஆரம்பக்காலத்தில் கண்டறிந்து சிகிச்சை வழங்கி வருவதை அனைவரும் பாராட்டுகின்றனர். அதில் மரண விகிதத்தைக் குறைப்பது நமது முக்கியமான நோக்கம். அதில் நாம் இந்தியாவிலேயே குறைந்த அளவில் இருக்கிறோம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறோம்.

அதற்காக பல விலை உயர்ந்த மருந்துகள் வரவழைக்கப்பட்டு அனைத்து மாவட்டங்களிலும் ஸ்டாக் வைத்துள்ளோம். அதற்காக முதல்வர் ரூ.75 கோடி நிதி வழங்கியுள்ளார். போர்க்கால அடிப்படையில் மருத்துவக் கட்டமைப்பை ஏற்படுத்தியுள்ளோம், அதனால்தான் எங்குமே படுக்கை வசதி இல்லை என்கிற நிலை இல்லை. அடிக்கடி ஆலோசனைக் கூட்டங்கள் நடத்தி நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

தாம்பரத்தில் 500 படுக்கை வசதிகள் தவிர, அடுத்து ஓரிரு நாளில் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டில் நவீன உபகரணங்கள், 700 படுக்கைகளுடன் கூடிய பிரம்மாண்ட மருத்துவமனை தயாராகி வருகிறது. பல கட்டமைப்புகளைத் தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருக்கிறோம். வலுப்படுத்தி வருகிறோம்.

பொதுமக்கள் நம்பிக்கையுடன் இருக்க வேண்டும். எந்தச் சூழ்நிலையிலும் அவசியமான, தேவையான வசதிகளை அரசு செய்து வருகிறது. ஆகவே, பொதுமக்கள் அச்சத்தைத் தவிர்த்து தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்”.

இவ்வாறு அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x