Published : 02 Jul 2020 01:25 PM
Last Updated : 02 Jul 2020 01:25 PM

கோவில்பட்டி சுற்றுவட்டாரப்பகுதியில் காவலர் முத்துராஜ் உறவினர் வீடுகளில் போலீஸார் விசாரணை

சாத்தான்குளம் தந்தை மகன் கொலை வழக்கில் தொடர்புடைய காவலர் முத்துராஜின் உறவினர் வீடுகளில் போலீஸார் விசாரணை நடத்தினர்.

சாத்தான்குளத்தைச் சேர்ந்த வியாபாரி ஜெயராஜ் (58). இவரது மகன் பென்னிக்ஸ்(31). இவர்கள் இருவரும் கடந்த 19ம் தேதி சாத்தான்குளம் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, 20-ம் தேதி கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

உடல்நலக்குறைவால் கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 22-ம் தேதி இரவு அனுமதிக்கப்பட்ட பென்னிக்ஸ், 23-ம் தேதி அதிகாலை ஜெயராஜ் ஆகியோர் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இந்தச் சம்பவம் தொடர்பாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், அந்த விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நேற்று முன்தினம் உத்தரவிட்டது.

உடனடியாக விசாரணையை தொடங்கிய சிபிசிஐடி போலீஸார் நேற்று இரவு தந்தை, மகன் உயிரிழந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சாத்தான்குளத்தில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் ரகு கணேசனை கைது செய்தது.

இதற்கிடையே இன்று காலை ஆய்வாளர் ஸ்ரீதர், தலைமை காவலர் முருகன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். காவலர் முத்துராஜை சிபிசிஐடி போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்நிலையில் கோவில்பட்டி பூரணம்மாள் காலனியில் உள்ள காவலர் முத்துராஜ் உறவினர் வீட்டுக்கு இன்று காலை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய ஆய்வாளர் சுதேசன், கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளர் முத்துலட்சுமி தலைமையிலான போலீஸார் சென்று விசாரணை நடத்தினர்.

மேலும், கோவில்பட்டி காவல் உட்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள காவலர்கள் உறவினர் வீடுகளுக்கு சென்று அவர் குறித்து விசாரணை நடத்தினர். அதேபோல், கயத்தாறு சுங்கச்சாவடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x