என்எல்சி விபத்து: உயிரிழந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

காவல்துறையினர் குவிப்பு.
காவல்துறையினர் குவிப்பு.
Updated on
1 min read

என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் இரண்டாவது நாளாக இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

நெய்வேலி என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலையத்தில் நேற்று (ஜூலை 1) 5-வது அலகில் கொதிகலன் வெடித்து 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 17 பேர் காயமடைந்து சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம், நிரந்தரப் பணி வழங்கக் கோரி உறவினர்களும், கிராம மக்களும் அனல்மின் நிலையத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். இதனால் மாவட்ட எஸ்.பி.அபிநவ் தலைமையில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தொழில்துறை அமைச்சர் சம்பத், கடலூர் மாவட்ட ஆட்சியர் சந்திரசேகர் சகாமுரி, எஸ்.பி. ஸ்ரீஅபிநவ், விருத்தாசலம் சார் ஆட்சியர் பிரவீன்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.

நெய்வேலி எம்எல்ஏ சபாராஜேந்திரன், திட்டக்குடி எம்எல்ஏ கணேசன், புவனகிரி எம்எல்ஏ சரவணன், விருத்தாசலம் எம்எல்ஏ கலைச்செல்வன், கடலூர் எம்.பி. ரமேஷ், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், பாமக மாநில துணைப் பொதுச் செயலாளர் அசோக்குமார், அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களான சிஐடியூ, தொமுச ஆகியவற்றின் நிர்வாகிகள் என்எல்சி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

பின்னர் இரவு நெய்வேலி இல்லத்தில் என்எல்சி தலைவர் ராகேஷ்குமார் தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நிரந்தர வேலை, ரூ.25 லட்சம் இழப்பீடு தர நிர்வாகம் முன்வந்தது. ஆனால், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் அரசியல் கட்சியினர் ஆந்திரா விபத்தில் வழங்கியது போல் ரூ.1 கோடி நிவாரணம், நிரந்தரப் பணி வழங்க வேண்டும் எனக் கோரினர். இந்தக் கோரிக்கையை நிர்வாகம் தரப்பில் ஏற்காததால் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட தொழிலாளர்களின் உறவினர்கள் உரிய நிவாரணம் வழங்கும் வரை உடலை வாங்க மறுத்து இன்று (ஜூலை 2ம் தேதி) காலை விபத்து நடைபெற்ற என்எல்சி இரண்டாவது அனல்மின் நிலைய வாயிலை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நெய்வேலி டிஎஸ்பி லோகநாதன் தலைமையில் நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டுப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நெய்வேலியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகின்றது.

இன்று மாலை மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in