Last Updated : 02 Jul, 2020 11:17 AM

 

Published : 02 Jul 2020 11:17 AM
Last Updated : 02 Jul 2020 11:17 AM

எங்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த தமிழ் சமுதாயத்துக்கு நன்றி: பென்னிக்ஸின் சகோதரி உருக்கம்

சாத்தான்குளம் வியாபாரிகள் மரணம் தொடர்பாக போலீஸார் கைது செய்யபப்ட்டதை தொடர்ந்து அவரது குடும்பத்தினர், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். சாத்தான்குளம் பகுதியில் நேற்றிரவு வியாபாரிகள் சிலர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மேலும், ஜெயராஜின் மகளும், பென்னிக்ஸின் சகோதரியுமான பெர்சி கூறும்போது, "எனது தந்தை மற்றும் அண்ணன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதியை நிலைநாட்டியுள்ளது. நாங்கள் நீதிமன்றத்தையே நம்பியிருக்கிறோம். எனது தந்தை, அண்ணன் சாவுக்கு காரணமான அனைத்து போலீஸாரும் தண்டிக்கப்பட வேண்டும். எங்களுக்கு ஆதரவுக் குரல் கொடுத்த அனைத்து தமிழ் சமுதாயத்துக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்" என்றார்.

ஆய்வாளர் ரகு கணேஷ், எஸ்.ஐ. பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் கைது:

சாத்தான்குளத்தில் போலீஸார் தாக்கியதில் வியாபாரிகளான தந்தை, மகன் உயிரிழந்த வழக்கில் காவல் ஆய்வாளர் மற்றும் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மேலும் 4 பேரை போலீஸார் கைது செய்தனர்.

சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இருவரும் போலீஸார் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர் நீதிமன்ற கிளை தானாக முன்வந்து விசாரித்து வருகிறது.

நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டது. அதன்பேரில் சிபிசிஐடி போலீஸார் நேற்று முன்தினம் தங்கள் விசாரணையை தொடங்கினர். சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார், டிஎஸ்பிக்கள் அணில்குமார், முரளிதரன் ஆகியோர் சாத்தான்குளத்தில் நேற்று காலை முதல் இரவு வரை முகாமிட்டு விசாரணை நடத்தினர்.

40 சிபிசிஐடி போலீஸார் 12 குழுக்களாக பிரிந்து சாத்தான்குளம் காவல் நிலையம், அரசு மருத்துவமனை, ஜெயராஜ் கடை இருந்த பகுதி, அவரது வீடு, கோவில்பட்டி கிளை சிறை உள்ளிட்ட இடங்களில் விசாரணை மேற்கொண்டு தடயங்களை சேகரித்தனர். விசாரணை அடிப்படையில் இந்த வழக்கை கொலை வழக்காக நேற்று இரவில் சிபிசிஐடி போலீஸார் மாற்றினர்.

ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் மர்ம மரணம் தொடர்பாக கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட இரண்டு வழக்குகளையும் தங்கள் வசம் எடுத்த சிபிசிஐடி போலீஸார், இந்திய தண்டனைச் சட்டம் 302-வது பிரிவின் கீழ் அந்த வழக்குகளை கொலை வழக்காக மாற்றினர். இதையடுத்து இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியாக கருதப்படும் உதவி ஆய்வாளர் ரகு கணேஷை நேற்று இரவில் கைது செய்தனர். அவரை தூத்துக்குடியில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்துக்கு கொண்டு வந்து தீவிரமாக விசாரணை நடத்தினர்.

பின்னர் நள்ளிரவு 12.30 மணியளவில் அவரை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் சென்றனர்.

மருத்துவப் பரிசோதனைக்குப் பிறகு அவரை, தூத்துக்குடி தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் ஹேமா வீட்டில் ஆஜர்படுத்தனர். அவரை வரும் 16-ம் தேதி வரை காவலில் வைக்க தலைமை நீதித்துறை நடுவர் ஹேமா உத்தரவிட்டார். அதன்பேரில் உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் பேரூரணியில் உள்ள மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டார்.

இதேவேளையில் மற்ற எதிரிகளையும் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிபிசிஐடி போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர். இந்நிலையில் தலைமறைவாக இருந்த மற்றொரு உதவி ஆய்வாளரான பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய மூவரும் இன்று அதிகாலையில் கைது செய்யப்பட்டனர். மேலும், ஆய்வாளர் ஸ்ரீதரை போலீஸார் விசாரணைக்காக தேடினர். அவர் தேனிக்கு தப்பிச் செல்ல முயன்றார். அவரை இன்று காலையில் கங்கைகொண்டான் சோதனை சாவடி அருகே சிபிசிஐடி போலீஸார் மடக்கிப் பிடித்து, தூத்துக்குடி சிபிசிஐடி அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர்.

இடமிருந்து வலமாக: ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், காவலர் முத்துராஜ், தலைமைக்காவலர் முருகன்.

பின்னர் அவர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்து, அவரையும் கைது செய்தனர். ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், தலைமைக்காவலர் முருகன், காவலர் முத்துராஜ் ஆகிய 4 பேரிடமும் சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் தலைமையில் போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சில போலீஸாரையும் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட ஆய்வாளர் உள்ளிட்ட 4 பேரை இன்னும் ஒருசில மணி நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x