Last Updated : 01 Jul, 2020 07:51 PM

 

Published : 01 Jul 2020 07:51 PM
Last Updated : 01 Jul 2020 07:51 PM

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு: வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

சேலம்

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து இன்று மாலை 6 மணி முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக கடந்த 12 ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது. தமிழக முதல்வர் பழனிசாமி மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்காக நீரைத் திறந்துவிட்டார்.

அன்றைய தினம் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 101.73 அடியாக இருந்தது. நீர்வரத்து வினாடிக்கு 1,439 கன அடியாக இருந்தது. பாசனத்துக்காக தொடக்கத்தில் வினாடிக்கு ஆயிரம் கன அடி நீர் திறக்கப்பட்டது. பின்னர் நீர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு அன்றைய தினம் மாலையில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியாக நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டது.

கடந்த 18 நாட்களாக வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் நீர் திறக்கப்பட்டு வந்தது. நீர்வரத்து அளவை விட அணையில் இருந்து பாசனத்துக்காக திறக்கப்பட்டு வந்த நீரின் அளவு மிக அதிகமாக இருந்ததால் மேட்டூர் அணை நீர்மட்டம் தினந்தோறும் சரிவடைந்து கொண்டே வந்தது. இந்நிலையில் இன்று காலை அணையின் நீர்மட்டம் 90.18 அடியாக இருந்தது.

இந்த சூழலில் டெல்டா பாசனத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 10 ஆயிரம் கன அடியிலிருந்து இன்று மாலை 6 மணி முதல் வினாடிக்கு 15 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணைக்கு தற்போது வினாடிக்கு 938 கன அடி வீதம் நீர் வந்து கொண்டுள்ளது. நீர் திறப்பு மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளதால் அணையின் நீர் மட்டம் வேகமாக குறையத் தொடங்கியுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x