Last Updated : 01 Jul, 2020 05:33 PM

 

Published : 01 Jul 2020 05:33 PM
Last Updated : 01 Jul 2020 05:33 PM

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் வழக்கு; சிபிசிஐடி குழுவினர் நேரில் ஆய்வு: கொலை வழக்குப் பதிவு குறித்து விசாரணைக்குப் பின்னரே முடிவு- ஐஜி தகவல்

தூத்துக்குடி

சாத்தான்குளத்தில் வியாபாரிகளான தந்தை, மகன் போலீஸாரால் தாக்கியதில் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிசிஐடி போலீஸார் 6 குழுக்களாக பிரிந்து தீவிரமான விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும், சிபிசிஐடி ஐஜி சங்கர், எஸ்பி விஜயகுமார் ஆகியோர் இன்று சாத்தான்குளம் வந்து நேரில் விசாரணை நடத்தினர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீஸார் கொடூரமாக தாக்கியதில் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மதுரை உயர்நீதிமன்ற கிளை தாமாக முன்வந்து விசாரணை நடத்தி வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதால், அந்த விசாரணை தொடங்கும் வரை சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்த வேண்டும் என மதுரை உயர்நீதிமன்ற கிளை நேற்று உத்தரவிட்டார்.

இதனை தொடர்ந்து சிபிசிஐடி போலீஸ் துணை கண்காணிப்பாளர் அணில்குமார், நேற்று மாலையே திருநெல்வேலி சரக டிஐஜி பிரவீன் குமார் அபிநபுவை சந்தித்து, வழக்கு தொடர்பான ஆவணங்களைப் பெற்று விசாரணையைத் தொடங்கினார். இந்நிலையில் சிபிசிஐடி போலீஸார் 30 பேர் 6 குழுக்களாக பிரிந்து வழக்கு விசாரணை தீவிரப்படுத்தியுள்ளனர்.

டிஎஸ்பிக்கள் அணில்குமார், முரளிதரன், ஆய்வாளர்கள் பிறைச்சந்திரன், உலகராணி, சரவணக்குமார் ஆகியோர் தலைமையில் 5 குழுவினர் சாத்தான்குளத்தில் முகாமிட்டு காவல் நிலையம், மருத்துவமனை, ஜெயராஜின் கடை இருந்த பகுதி, அவர்களது வீடு உள்ளிட்ட இடங்களில் விசாரணை நடத்தினர்.

மேலும், இந்த வழக்கு தொடர்பான பல்வேறு தடயங்களை சேகரித்தனர். இதேபோல் சிறப்பு உதவி ஆய்வாளர் சேவியர் தலைமையில் ஒரு குழுவினர் கோவில்பட்டி குற்றவியல் நீதித்துறை நடுவர் மன்றத்துக்கு சென்று இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீஸ் சார்பில் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கை நகல்களை சமர்பித்தனர்.

கொலை வழக்கு பதிவு செய்யப்படுமா?

இந்நிலையில் சிபிசிஐடி ஐஜி சங்கர் மற்றும் எஸ்பி விஜயகுமார் ஆகியோர் இன்று மாலை சாத்தான்குளத்துக்கு வந்து நேரில் விசாரணை நடத்தினர். சாத்தான்குளம் காவல் நிலையம் உள்ளிட்ட இடங்களுக்கு நேரில் சென்று அவர்கள் விசாரணை நடத்தினர்.

முன்னதாக தூத்துக்குயில் செய்தியாளர்களிடம் பேசிய ஐஜி சங்கர், சாத்தான்குளம் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி சார்பில் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளோம். இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றுவது குறித்து தற்போது எந்த முடிவும் எடுக்கவில்லை. விசாரணை அடிப்படையில் தான் அது பற்றி முடிவு செய்யப்படும் என்றார் அவர்.

நீதித்துறை நடுவர் விசாரணை:

சாத்தான்குளத்தில் சிபிசிஐடி போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதால், கோவில்பட்டி நீதித்துறை நடுவர் பாரதிதாசன் இன்று தனது விசாரணையை திருச்செந்தூர் அரசு விருந்தினர் மாளிகையில் வைத்து தொடர்ந்தார். சாத்தான்குளம் போலீஸ் நிலையத்தில் பணியாற்றிய காவலர்கள் உள்ளிட்ட சாட்சிகளை வரவழைத்து அவர் விசாரணை நடத்தினர்.

இதேபோன்று தடயவியல் துறை துணை இயக்குநர் விஜய லதா, உதவி இயக்குநர் கலா லெட்சுமி தலைமையிலான தடயவியல் நிபுணர்கள் சாத்தான்குளம் காவல் நிலையம், ஜெயராஜ் கடை உள்ளிட்ட இடங்களில் 2-வது நாளாக இன்றும் தடயங்களை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x