

சிவகங்கை மாவட்ட அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சொந்த ஊரில் திட்டப் பணியை ஆய்வு செய்த பொதுப்பணித்துறை அதிகாரிகளை தாக்கிய 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
கதர்கிராமத் தொழில்கள் நலவாரியத்துறை அமைச்சர் ஜி.பாஸ்கரனின் சொந்த ஊரான சிவகங்கை அருகே தமறாக்கியில் நீர்வள நிலவள திட்டத்தில் கண்மாய் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
இப்பணியை பொதுப்பணித்துறை உதவிப்பொறியாளர் சம்பத்குமார் ஆய்வு செய்தார்.
அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் உள்ளிட்ட 5 பேர் சம்பத்குமாரை பணி செய்யவிடாமல் தடுத்து கடுமையாக தாக்கினர்.
காயமடைந்த சம்பத்குமார் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து சிவகங்கை தாலுகா போலீஸாரிடம் புகார் கொடுத்தும் வழக்கு பதியவில்லை.
இதையடுத்து பொதுப்பணித்துறை பொறியாளர்கள் மற்றும் உதவி பொறியாளர்கள் சங்கம் சார்பில் சிவகங்கை எஸ்பி ரோஹித்நாதனிடம் புகார் கொடுத்தனர்.
எஸ்.பி உத்தரவில் பாலமுருகன் உட்பட 5 பேர் மீது போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
இதுகுறித்து பொறியாளர்கள் கூறுகையில், ‘ அலுவலர்களை பணி செய்வோர் தடுப்போர் மற்றும் தாக்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அலுவலர்கள் மற்றும் ஊழியர்களுக்கு பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்,’ என்று கூறினர்.