Published : 01 Jul 2020 01:18 PM
Last Updated : 01 Jul 2020 01:18 PM

அமைச்சர்கள் உதயகுமாரும் பாண்டியராஜனும் பேட்டி என்ற பெயரில் பிதற்ற வேண்டாம்; பதற்றத்தில் உள்ள மக்களைப் பாருங்கள்; ஐ.பெரியசாமி பதிலடி

ஐ.பெரியசாமி: கோப்புப்படம்

சென்னை

பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகள் அனைத்தையும் பொதுவெளியில் கொண்டு வந்து தன்னுடன் விவாதிக்கத் தயாரா என, அமைச்சர் ஆர்.பி.உதயகுமாருக்கு திமுக துணைப் பொதுச்செயாளர் ஐ.பெரியசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக, ஐ.பெரியசாமி இன்று (ஜூலை 1) வெளியிட்ட அறிக்கை:

"முதல்வர் ஏதாவது மக்கள் நலன் சார்ந்த அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஒரு நாளைக்கு முன்போ அல்லது ஒரு மணி நேரத்திற்கு முன்போ அறிக்கை விட்டு, நான் சொல்லித்தான் இந்த அறிவிப்பு வந்துள்ளது என ஒரு தவறான தகவலை திமுக தலைவர் மக்களிடத்திலே ஏற்படுத்தி வருகிறார் என்று, 2.,000 கோடி ரூபாய் பாரத்நெட் டெண்டர் புகழ் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்திருப்பதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடிக்கடி உரிமையாளரை மாற்றும் வாடகைதாரருக்கு திமுக தலைவரை விமர்சிக்கத் தகுதி இல்லை.

சசிகலா, டிடிவி தினகரன், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி என்று உரிமையாளரை மாற்றிய உதயகுமாரே, இந்த ஆட்சியில் ஒரு வாடகைதாரர்தான்! வாடகை செலுத்தும் உரிமையாளர் பழனிசாமிக்கு, அவர் ஆதரவாகப் பேசலாம். ஆனால், திமுக தலைவரைப் பார்த்து விமர்சனம் செய்ய அவருக்கு எந்தத் தகுதியும் இல்லை.

16.3.2020 அன்றிலிருந்து திமுக தலைவர் வெளியிட்ட ஆலோசனைகளை ஒன்றிரண்டை நிறைவேற்றி, மக்கள் உயிர்காக்கும் எண்ணற்ற அரிய ஆலோசனைகளைப் புறக்கணித்த ஊழல் கூடாரம் அதிமுக ஆட்சி.

அமைச்சர் உதயகுமார், மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினர். ஆனால், சொந்த மதுரை மாவட்ட மக்களை கரோனாவின் பிடியில் குலை நடுங்க வைத்துவிட்டு, டெண்டரில் 'கமிஷன்' பார்க்கும் வேலையில் சென்னையில் தீவிரமாக இருக்கிறார்.

திமுக தலைவரின், 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தின் பணி அவர் கண்ணுக்குத் தெரியவில்லை. அதிமுக அமைச்சர்களும், முதல்வரும் வீட்டுக்குள்ளேயே, ஏன், கஜானாவுக்குள்ளேயே முடங்கிக் கிடந்தபோது, கரோனா பணிகளில் ஈடுபட்டவர், திமுக தலைவர்.

இன்றைக்கும் கட்சி நிர்வாகிகள் முதல் உள்ளாட்சி மன்ற நிர்வாகிகள் வரை, அனைவரையும் தினமும் இப்பணிகளில் ஈடுபடுத்தி வருபவர்!

கரோனா காலத்தில், மக்களுக்கு யார் உதவி செய்தாலும், அதை வரவேற்க வேண்டியது ஒரு பொறுப்புள்ள அரசின் கடமை. அதிலும் எதிர்க்கட்சி, மாபெரும் 'ஒன்றிணைவோம் வா' என்ற மக்கள் இயக்கத்தை நடத்திய போது, அதை வரவேற்க மனமில்லை என்றாலும், கொச்சைப்படுத்தும் அரசு, இங்குள்ள அதிமுக அரசு. ஏனென்றால், அமைச்சர் உதயகுமாருக்கோ முதல்வருக்கோ மக்கள் பணியில் அக்கறை இல்லை.

பிரதான எதிர்க்கட்சித் தலைவரின் ஆலோசனை வழங்கும் அறிக்கைகளையும், மக்கள் நல உதவிகளையும், பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் உறுப்பினராக இருப்பவரே கொச்சைப்படுத்துகிறார்.

மாநில பேரிடர் மேலாண்மைத் தலைவரான முதல்வரும், உறுப்பினரான உதயகுமாரும் படுதோல்வி அடைந்து, நிர்க்கதியாக நிற்கிறார்கள்.

அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்: கோப்புப்படம்

ஜூன் 1 ஆம் தேதி, மதுரையில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எவரும் இல்லை. ஆனால், ஜூன் 30 ஆம் தேதி, அங்கு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் 2,557 பேர். 3 பேராக இருந்த கரோனா மரணம், நேற்று (ஜூன் 30) மதுரையில் 32 ஆக உயர்ந்திருக்கிறது. கடந்த நான்கு தினங்களாக, தினமும் 200 பேர் கரோனாவால் அங்கு பாதிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள மாவட்டங்களில் மதுரைக்கு மட்டும் தனி ஊரடங்கு போட வேண்டிய நிலை ஏற்பட்டது. பேரிடர் மேலாண்மை உறுப்பினரின் மாவட்டத்தில் இதுதான் நிலை!

தமிழ்நாட்டில் ஜூன் 1 ஆம் தேதி பாதிக்கப்பட்டோர் 23 ஆயிரத்து 495 பேர்தான். ஆனால், நேற்றைய கணக்குப்படி 90 ஆயிரத்து 167. அதே போல், தமிழக அளவில் இறந்தவர்களின் எண்ணிக்கையான 184, நேற்றைய கணக்குப்படி 1,201 ஆக உயர்ந்து மக்களை அச்சப்படுத்திக் கொண்டிருக்கிறது.

கரோனா மரணம் நோய்த் தொற்றை விட வேகமாக இரட்டிப்பு ஆகிறது என்று இன்று, ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதில், 'கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களில் 40 சதவீதம் பேர், இரு நாட்கள் கூட மருத்துவமனையில் உயிருடன் இருப்பதில்லை' என்ற அதிர்ச்சித் தகவலை வெளியிட்டுள்ளது. கரோனா நோய்த் தொற்றை ஒழிக்கும் பணியில், அதிமுக அரசின் நிர்வாகம் இதுதான்.

மக்கள் நலனில் ஆக்கபூர்வமான ஆலோசனைகள் அடங்கிய அறிக்கைகளை வெளியிடுபவர், திமுக தலைவர். ஆனால், கரோனா நோய்த் தொற்றை பரவவிட்டு, நோய்த் தொற்று, நோய்த் தடுப்பு நடவடிக்கைகளில் ஊழல் செய்து, மருத்துவமனைகளில் இரு நாட்கள் கூட உயிருடன் கரோனா நோயாளிகள் இருக்க முடியாத ஒரு அபாயகரமான அச்சமூட்டும் சூழலை மக்களுக்கு ஏற்படுத்தியுள்ளது, பேரிடர் மேலாண்மை ஆணைய உறுப்பினர் உதயகுமாரும், தலைவர் முதல்வர் பழனிசாமியும்தான். இந்தத் தோல்வியால் அடித்தட்டு மக்கள் வரை அச்சத்தில் உறைந்து போயிருக்கிறார்கள் என்பதுதான் உண்மை.

'பொதுவாழ்வில் இருப்போரை முடக்கிப் போட அறிக்கைகளை விடுகிறார்' என்று கூறும் அமைச்சர் உதயகுமார், பொது வாழ்வு என்றால், கிலோ என்ன விலை என்று கேட்பவர். பாரத் நெட் டெண்டர் திட்ட ஊழல், திமுக தலைவர் கூறியது போல், இன்றைக்கு டெல்லி செங்கோட்டை வரை அதிமுக அரசின் மானம் காற்றில் பறக்கிறது.

மூத்த ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ்பாபு விருப்ப ஓய்வில் சென்றது, பிறகு அவரை வேறு அதிகாரமில்லாத துறைக்கு மாற்றியது, ஜூனியர் ஐஏஎஸ் அதிகாரியை நியமித்து, உள்ளூர் நிறுவனங்கள் கலந்து கொள்ள முடியாதபடி டெண்டர் விதிகளை முறைகேடாக உருவாக்கியது என்று, ஊழலில் ருசி பார்த்துக் கொண்டிருக்கும் அமைச்சர் உதயகுமார், மத்திய அரசு, டெண்டரை ரத்து செய்ய உத்தரவிட்ட பிறகும், 'மீசையில் மண் ஒட்டவில்லை' என்று பேசுவது, அருவருப்பின் அடையாளம்.

'டெண்டர் விவாகரத்தில் முகாந்திரமில்லாமல் குற்றம்சாட்டுகிறீர்கள் என்ற கேள்விக்கு மூக்கறுபட்டு நீதிமன்றத்திலிருந்து வழக்கை திமுக வாபஸ் பெற்றதாக' ஒரு அபாண்டமான பொய் சொல்கிறார். லஞ்ச ஊழல் தடுப்புத் துறையை விட்டு, புகாரில் முகாந்திரமில்லை என்று நீதிமன்றத்தில் அறிக்கை கொடுக்க வைத்தது யார்?

ஊழல் இல்லை என்று அமைச்சர் சொல்வது உண்மையென்றால், பாரத் நெட் டெண்டர் குறித்த கோப்புகள் அனைத்தையும் பொது வெளியில் கொண்டு வந்து என்னுடன் விவாதிக்கும் தெம்பும், திராணியும் உதயகுமாருக்கு இருக்கிறதா? குறிப்பாக தற்போதுள்ள தகவல் தொழில்நுட்பச் செயலாளர் கையெழுத்துப் போடாத அந்தக் கோப்பை எடுத்து வரத் தயாரா?

இன்னொரு அமைச்சர்! அவர் பெயர் பாண்டியராஜன். ஒரு தலைமைக்கு விசுவாசமாக இருக்க முடியாதவர், தமிழ் வளர்ச்சித் துறையில் தமிழை ஒவ்வொரு நாளும் படுகொலை செய்து கொண்டிருப்பவர், திமுக தலைவரைப் பார்த்துப் பேசத் தகுதி இல்லை.

அமைச்சர் பாண்டியராஜன்: கோப்புப்படம்

'முதல்வர் எடுக்கும் முடிவுகளைத் தெரிந்து கொண்டு முன்கூட்டியே ஆலோசனைகள் என்ற பெயரில் அறிக்கைகளை விடுகிறார்' என்று, அவமானமாத்தை மறைத்துக் கொண்டு பேட்டி கொடுக்கிறார். அவரிடம் நான் கேட்க விரும்புவது, உங்கள் முதல்வரின் முடிவு எடுக்கும் ரகசியம் திமுக தலைவருக்குத் தெரிகிறது என்று சொல்கிறார்.

ஆகவே, அமைச்சர்கள் உதயகுமாரும், பாண்டியராஜனும் பேட்டி என்ற பெயரில் பிதற்ற வேண்டாம். பதற்றத்தில் உள்ள மக்களைப் பாருங்கள்.

திமுக தலைவர் அளிக்கும் பொன்னான ஆலோசனைகளைக் கேளுங்கள். வீடு வீடாக குடியேறி வந்த பழக்கதோஷத்தில் எதைப் பார்த்தாலும் சந்தேகப்படாதீர்கள்.

கரோனா கால மக்கள் பணியில் ஒரு பிராதன எதிர்க்கட்சி, 'ஒன்றிணைவோம் வா' என்று, ஒரு மாபெரும் இயக்கத்தை நடத்தி மக்களின் பட்டினியைப் போக்கப் பாடுபட்டுள்ளது என்றால், இந்தியாவிலேயே அது திமுக மட்டும்தான்! திமுக தலைவர் மட்டும்தான்!".

இவ்வாறு ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x