Published : 01 Jul 2020 12:19 PM
Last Updated : 01 Jul 2020 12:19 PM
புதுச்சேரியில் உள்ள 507 நியாய விலைக்கடைகளைத் திறக்காமல் முழுவதுமாக மூடிவிட்டு, அதற்கு மாற்றாக புதுச்சேரி அரசுப் பள்ளி வளாகத்தில் பயனாளிகளுக்கு இலவச அரிசி வழங்கப்படுகிறது.
புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 3.36 லட்சம் குடும்ப அட்டைகள் உள்ளன. அதில் 1.8 லட்சம், ஏழை மக்களுக்கான சிவப்பு குடும்ப அட்டைகள், 1.56 லட்சம் மஞ்சள் குடும்ப அட்டைகள். மஞ்சள் அட்டைகளை பல ஏழைகளும் வைத்துள்ளனர்.
இச்சூழலில் கரோனா அச்சுறுத்தலால் ஊரடங்கு அமலானதால் புதுச்சேரிக்கு மத்திய அரசு 9,425 மெட்ரிக் டன் அரிசி, பருப்பு ஒதுக்கீடு செய்தது. இதையடுத்து, ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மூன்று மாதங்களுக்கு அரிசி, பருப்பு ஆகியவற்றை நியாயவிலைக் கடை மூலமாக தராமல் அரசு ஊழியர்கள் மூலம் சிவப்பு குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில், மஞ்சள் குடும்ப அட்டைதாரர்களுக்கும் நியாய விலைக்கடை மூலம் இலவச அரிசி தர புதுச்சேரி அரசு திட்டமிட்டது. அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் தவிர்த்து, மற்றவர்களுக்குத் தர துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அனுமதி தந்தார். இதைத் தொடர்ந்து, புதுச்சேரி அரசு ரூ.5.28 கோடியை ஒதுக்கீடு செய்தது. அரசு ஊழியர்கள் தவிர்த்து மீதமுள்ள மஞ்சள் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி வழங்கும் பணி ஊரடங்கு தொடங்கிய பிறகு தற்போது தொடங்கியுள்ளது.
மாநில அரசு முடிவின்படி நியாய விலைக்கடை மூலம் அரிசி வழங்கப்படவில்லை. நியாய விலைக்கடை ஊழியர்களைத் தவிர்த்து, மீண்டும் பல்வேறு துறை அதிகாரிகள் முன்னிலையில் ஆசிரியர்கள் மூலமாக அரசுப் பள்ளிகளில் வைத்து துணைநிலை ஆளுநர் உத்தரவின்படி அரிசி விநியோகம் இன்று (ஜூலை 1) தொடங்கியுள்ளது.
இது தொடர்பாக நியாய விலைக்கடை ஊழியர்கள் தரப்பில் கூறுகையில், "புதுச்சேரியில் 507 நியாய விலைக்கடைகள் முழுவதும் மூடப்பட்டு அங்கு பணிபுரியும் 800 பேரின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. ஏற்கெனவே கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக ஊதியம் வழங்கப்படவில்லை. கரோனா காலத்தில் நாங்கள் வேலை செய்யத் தயாராக இருந்தும் பணி வழங்கவில்லை. அரிசி விநியோகத்தை ஆசிரியர்கள் மூலம் மேற்கொள்கின்றனர். நியாய விலைக்கடைகளின் செயல்பாடும், ஊழியர்களின் வாழ்வும் முற்றிலும் கேள்விக்குறியாகிவிட்டது" என்கின்றனர், சோகத்துடன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT