Last Updated : 01 Jul, 2020 11:53 AM

 

Published : 01 Jul 2020 11:53 AM
Last Updated : 01 Jul 2020 11:53 AM

ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 தமிழக, கேரள மீனவர்கள் தூத்துக்குடி வந்தனர்: அமைச்சர் கடம்பூர் ராஜூ வரவேற்பு

தூத்துக்குடி

ஈரானில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவை சேர்ந்த 687 மீனவர்களுடன் இந்திய கடற்படை கப்பல் 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' இன்று காலை தூத்துக்குடி வஉசி துறைமுகம் வந்து சேர்ந்தது.

கப்பலில் வந்தவர்களை தமிழக செய்தி மற்றும் விளம்பத் துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு, துறைமுக பொறுப்புக் கழக தலைவர் தா.கி.ராமச்சந்திரன், மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உள்ளிட்ட அதிகாரிகள் வரவேற்றனர்.

மருத்துவப் பரிசோதனை மற்றும் குடியுரிமை சோதனை முடிந்த பிறகு கப்பலில் வந்த அனைவரும் அரசு பேருந்துகளில் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

கரோனா ஊரடங்கால் பல்வேறு வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்கள் 'ஆபரேசன் சமுத்திர சேது' திட்டத்தின் கீழ் தாய் நாட்டுக்கு அழைத்து வரப்படுகின்றனர். அவ்வாறு ஜூன் 2-ம் தேதி இலங்கையில் இருந்து 713 இந்தியர்களும், 7-ம் தேதி மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்களும் கடற்படைக்கு சொந்தமான 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் மூலமும், ஜுன் 23-ம் தேதி மாலத்தீவில் இருந்து மேலும் 198 இந்தியர்கள் ஐஎன்எஸ் ஐராவத் கப்பல் மூலமும் தூத்துக்குடிக்கு அழைத்து வரப்பட்டனர்.

இதன் தொடர்ச்சியாக ஈரான் நாட்டில் சிக்கியுள்ள இந்திய மீனவர்களை அழைத்து வருவதற்காக 'ஐஎன்எஸ் ஜலஸ்வா' கப்பல் ஈரானில் உள்ள பந்தர் அப்பாஸ் துறைமுகத்துக்கு சென்றது. அங்கிருந்து 687 இந்திய மீனவர்களை ஏற்றிக் கொண்டு இந்த கப்பல் கடந்த 25-ம் தேதி இரவு கிளம்பியது. இக்கப்பல் 5 நாள் பயணத்துக்கு பிறகு இன்று காலை 9.30 மணியளவில் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தது.

இந்த கப்பலில் வந்த 687 மீனவர்களில் 649 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். 38 பேர் கேரள மீனவர்கள். தமிழக மீனவர்களில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் 514 பேர் ஆவர். தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மீனவர்கள் 33 பேர்.

கப்பலில் இருந்து இறங்கியவுடன் அனைவருக்கும் கரோனா அறிகுறிகள் இருக்கிறதா என மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அனைவரும் பேருந்துகளில் பயணிகள் முனையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர் சுங்க மற்றும் குடியுரிமை சோதனை முடிந்ததும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் அரசுப் பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றும் கேரளாவைச் சேர்ந்தவர்கள் மட்டும் தூத்துக்குடி தனிமை முகாம்களில் தங்க வைக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்காக அவர்களிடம் இருந்து ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x