Published : 01 Jul 2020 07:19 AM
Last Updated : 01 Jul 2020 07:19 AM

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற செயலர் கெ.பக்தவத்சலம் காலமானார்: தமிழ் ஆர்வலர்கள் இரங்கல்

கெ.பக்தவத்சலம்

சென்னை

சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் இயங்கி வரும் இலக்கிய அமைப்பான ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்ற செயலராக 56 ஆண்டுகளாக பதவி வகித்துவந்த கெ.பக்தவத்சலம் நேற்று காலமானார்.

ஒய்.எம்.சி.ஏ.வின் இலக்கிய அமைப்பான ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் சென்னை உயர் நீதிமன்றம் எதிரில் இயங்கி வருகிறது. வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை இம்மன்றம் கூடும். தமிழறிஞர்கள் மட்டுமன்றி பல்வேறு துறையைச் சார்ந்தவர்களும் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நிகழ்த்துவர். சாலை இளந்திரையன் தொடங்கி சுரதா, முடியரசன், மீரா, அப்துல் ரகுமான் முதலாக 128 கவிஞர்களைப் பற்றிய தொடர் சொற்பொழிவுகள் இங்கு நடைபெற்றுள்ளன.

இதன் செயலராக கடந்த 56 ஆண்டுகளாக பொறுப்பு வகித்து வந்தவர் கெ.பக்தவத்சலம். பல்துறை அறிஞர்கள் அனைவரையும் ஒய்.எம்.சி.ஏ.வுக்கு அழைத்து வந்து, அவரவர் விரும்பும் பொருளில் சொற்பொழிவாற்ற வைத்து தமிழ் அன்பர்களுக்கு செவிக்குணவு அளிப்பது இவரது முக்கியபணி. தமிழ் இலக்கியம், இலக்கணம், இசை, மருத்துவம் மட்டுமின்றி அனைத்துத் துறைகளிலும் சிறப்பு வாய்ந்த அறிஞர்களை அழைத்துசொற்பொழிவுகள்நிகழ்த்தச் செய்வார். இவர் சென்னை குடிநீர் வாரியத்தில் பொறியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

அவர் வயது முதிர்வு காரணமாக, ஆவடியை அடுத்த திருநின்றவூரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை காலமானார். நேற்று மாலையே உடல் அடக்கம் செய்யப்பட்டது. இவரது மரணம் பல்வேறு தமிழ் ஆர்வலர்களை துயரத்துக்கு உள்ளாக்கியுள்ளது. பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மனைவி சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார்.

இவருக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர். மகன் ப.தாமரைக்கண்ணன், சென்னை மாநிலக் கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக உள்ளார். இவரை 9941357869 என்ற எண்ணில் தொடர்புகொண்டு இரங்கல் தெரிவிக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x