ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 இந்திய மீனவர்கள் நாளை தூத்துக்குடி துறைமுகம் வருகை

ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் மூலம் ஈரானில் இருந்து 687 இந்திய மீனவர்கள் நாளை தூத்துக்குடி துறைமுகம் வருகை

Published on

ஈரான் நாட்டில் இருந்து 687 இந்திய மீனவர்கள் கடற்படை கப்பல் மூலம் நாளை (ஜூலை 1) தூத்துக்குடி வஉசி துறைமுகம் வருகின்றனர்.

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் உள்ள கரோனா நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக கரோனா பரிசோதனை செய்யும் பணியை மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தொடங்கி வைத்தார்.

பின்னர் தூத்துக்குடி பூபாலராயர்புரம், கிருஷ்ணராஜபுரம், போல்பேட்டை, அண்ணாநகர் உள்ளிட்ட நோய் கட்டுப்பாட்டு பகுதிகளை அவர் ஆய்வு செய்தார். மாநகராட்சி ஆணையர் வீ.ப.ஜெயசீலன், நகரநல அலுவலர் அருண்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பின்னர் மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி கூறியதாவது:

தூத்துக்குடி மாநகரில் உள்ள நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் வீடு வீடாக கரோனா பரிசோதனை செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கரோனா தொற்று உள்ளவர்களை உடனுக்குடன் அடையாளம் கண்டு சிகிச்சை அளிக்க முடியும். இதனால் கரோனா தொற்று பரவுவதை கட்டுப்படுத்தலாம்.

ஈரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழக மீனவர்கள் இந்திய கடற்படை கப்பல் மூலம் தூத்துக்குடி வஉசி துறைமுகத்துக்கு அழைத்து வரப்படுகின்றனர். ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல் 687 இந்திய மீனவர்களுடன் நாளை காலை 7 மணிக்கு துறைமுகத்தின் வடக்கு சரக்கு தளத்தை வந்தடையும்.

அனைவரும் மருத்துவ பரிசோதனை அந்தந்த மாவட்டங்களுக்கு அரசு பேருந்துகள் மூலம் அனுப்பி வைக்கப்படுவார்கள். இதில் அதிகமானவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்.

மேலும், தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் உள்ளிட்ட அனைத்து கடலோர மாவட்டங்களை சேர்ந்த மீனவர்களும் இருக்கின்றனர் என்றார் ஆட்சியர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in