

சிவகங்கை மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் காரைக்குடி, சிங்கம்புணரி உள்ளிட்ட இடங்களில் வர்த்தகர்கள் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்து கொண்டனர்.
சிவகங்கை மாவட்டத்தில் தொடக்க காலத்தில் 12 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு, அனைவரும் குணமடைந்தனர்.
தொடர்ந்து வெளிமாநிலங்கள் மற்றும் சென்னையில் இருந்து வருவோரை சுகாதாரத்துறையினர் பரிசோதித்து வருகின்றனர். ஏற்கனவே 350-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிவகங்கை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் இன்று சிங்கம்புணரி, வேங்கைப்பட்டி, திருப்புவனம், திருப்பாச்சேத்தி, குன்றக்குடி, தேவகோட்டை, இளையான்குடி, காரைக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 25 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் நேற்று 14 பேர் குணமடைந்தனர்.
மாவட்டத்தில் கரோனா வைரஸ் தொற்று வேகமாகப் பரவி வருவதால் சிங்கம்புணரி, காரைக்குடியில் வர்த்தகர்கள் தாங்களே கட்டுப்பாடுகளை விதித்து கொண்டனர். அவர்கள் தினமும் பகல் 2 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க முடிவு செய்துள்ளனர்.