Last Updated : 30 Jun, 2020 03:25 PM

 

Published : 30 Jun 2020 03:25 PM
Last Updated : 30 Jun 2020 03:25 PM

புதுச்சேரியில் புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று உறுதி: மேலும் ஒருவர் உயிரிழப்பு; இறப்பு எண்ணிக்கை 12 ஆக உயர்வு

அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ்: கோப்புப்படம்

புதுச்சேரி

புதுச்சேரியில் இன்று மேலும் 31 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதனால் பாதிப்பு எண்ணிக்கை 714 ஆகவும், உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆகவும் உயர்ந்துள்ளது.

புதுச்சேரி மாநிலத்தில் இன்று (ஜூன் 30) புதிதாக 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 714 ஆகவும், சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 430 ஆகவும் அதிகரித்துள்ளது. மேலும், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்தார். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 272 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இது குறித்து புதுச்சேரி சுகாதாரத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணாராவ் இன்று கூறும்போது, "புதுச்சேரியில் நேற்று 558 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 31 பேருக்கு கரோனா தொற்று இருப்பது இன்று கண்டுபிடிக்கப்பட்டது. இதில் 21 பேர் கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியிலும், 7 பேர் ஜிப்மரிலும், 3 பேர் மாஹே பிராந்தியத்திலும் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த 38 வயது நபர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். அவர் தொடக்கத்தில் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு சென்றுள்ளார். கடந்த 20 ஆம் தேதி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். 9 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த அவருக்கு நேற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு வெண்டிலேட்டரில் வைக்கப்பட்டிருந்த நிலையில் உயிரிழந்தார். இதனால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை மாநிலத்தில் 714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 208 பேர், ஜிப்மரில் 110 பேர், 'கோவிட் கேர் சென்டரில்' 66 பேர், காரைக்காலில் 35 பேர், ஏனாமில் 2 பேர், மாஹேவில் 4, பிற பகுதியில் 5 பேர் என மொத்தம் 430 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று கதிர்காமம் அரசு மருத்துவக் கல்லூரியில் 7 பேர், ஜிப்மரில் 3 பேர் என மொத்தம் 10 பேர் சிகிச்சையில் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் குணடைந்து வீடு திரும்பியோர் எண்ணிக்கை 272 ஆக அதிகரித்துள்ளது.

இதுவரை 16 ஆயிரத்து 479 பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன. 15 ஆயிரத்து 596 பரிசோதனை முடிவுகள் 'நெகட்டிவ்' என்று வந்துள்ளன. 149 பரிசோதனைகள் முடிவுக்காக காத்திருப்பில் உள்ளன. 149 பகுதிகள் கட்டுப்பாட்டு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளன. 112 பகுதிகளுக்கு கட்டுப்பாட்டு மண்டலத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

அணுகும் யாருக்கும் பரிசோதனை செய்ய தயாராக உள்ளோம். அதுபோல் தனியார் மருத்துவமனைகள், பல் மருத்துவக் கல்லூரிகள் அனைத்திலும் சிகிச்சைக்கு என்னென்ன தேவைகள் வேண்டுமோ அனைத்தும் தயாராக உள்ளன. நாடு முழுக்க நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் பேர் வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் 4,000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.. ஆந்திராவில் தினமும் 1,000 பேர் வரை பாதிக்கப்படுகின்றனர்.

புதுச்சேரியின் பக்கத்து மாவட்டங்களில் தினமும் 100 பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஆகவே பொதுமக்களின் ஆதரவு, சுகாதாரத்துறை 'கரோனாவை ஒழிப்பது நமது பொறுப்பு' என்று பணி செய்தால் புதுச்சேரியில் கரோனாவை ஒரு வாரத்தில் கட்டுப்படுத்த முடியும்" என தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x