Published : 30 Jun 2020 03:18 PM
Last Updated : 30 Jun 2020 03:18 PM

10 சதவீத பொருளாதார இட ஒதுக்கீடு: தமிழக அரசு உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு

பொருளாதார இட ஒதுக்கீட்டில் சமபந்தப்பட்டவர்கள் வருமான சான்றிதழை தாசில்தார்களிடம் சமர்பிக்கும் மத்திய அரசின் உத்தரவை தமிழக அரசு நிறுத்தியுள்ளதை எதிர்த்து வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்காக 10 சதவீத இடஒதுக்கீடு கொண்டு வந்து மத்திய அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தின் கீழ், கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், பொருளாதார ரீதியில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

அந்த உத்தரவில், ஆண்டுக்கு 8 லட்சம் ரூபாய்க்கு குறைவாக வருமானம் உள்ளவர்கள் இந்த சலுகையைப் பெற தகுதியுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டு சலுகையைப் பெற அந்தந்த தாசில்தாரர்களிடம் இருந்து வருமானம் மற்றும் சொத்து சான்றிதழ்களை சம்ரப்பிக்கவேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சொத்து மற்றும் வருமான சான்றுகள் வழங்க தாசில்தாரர்களுக்கு அதிகாரம் வழங்கி மத்திய அரசு உத்தரவிட்டது. இந்நிலையில், இந்த சான்றிதழ்களை தற்போது வழங்க வேண்டாம் என, தமிழக வருவாய் நிர்வாக ஆணையர், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் கடந்த ஜூன் 4-ம் தேதி சுற்றறிக்கை பிறப்பித்துள்ளார்.

இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரியும், அதற்கு தடை விதிக்க கோரியும், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ரெட்டி நல சங்கத்தின் சார்பில் அதன் செயற்குழு உறுப்பினர் கிருபாகரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் சுப்பையா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசிடம் எந்தவொரு ஆலோசனையும் நடத்தாமலேயே மத்திய அரசு இந்த சட்டத்தை கொண்டு வந்ததாக தமிழக அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் தெரிவித்தார்.

தமிழகத்தில் இந்த சட்டத்தை நடைமுறை படுத்துவது குறித்து ஆலோசித்து முடிவெடுக்க மூத்த அமைச்சர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளாதவும், இந்த விவகாரத்தில் விரைவில் கொள்கை முடிவு எடுக்கப்படும் எனவும் விளக்கமளித்தார்.

இதை பதிவு செய்த நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை ஜூலை 11-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர். இதே கோரிக்கையுடன் நாகர்கோவிலில் உள்ள பார்வதிபுரத்தைச் சேர்ந்த அகில பாரத பிராமணர் சங்கத்தின் தலைவர் குளத்துமணி என்பவர் தொடர்ந்த வழக்கும் அன்றைய தினம் தள்ளி வைக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x