Published : 30 Jun 2020 02:00 PM
Last Updated : 30 Jun 2020 02:00 PM

தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது; பெற்றோர் விருப்பப்பட்டு செலுத்தத் தடை இல்லை; உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்

தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதேசமயம் பெற்றோர் தாமாக விருப்பப்பட்டுக் கட்டணம் செலுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்களின் சங்கத்தின் சார்பில் அதன் மாநில பொதுச் செயலாளர் கே.பழனியப்பன் தாக்கல் செய்த வழக்கில், தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணங்களை வசூலிக்கக்கூடாது என்ற தமிழக அரசின் அரசாணை சட்டவிரோதமானது எனவும், பள்ளி மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலித்தால் தான் பள்ளிகளில் பணியாற்றும் ஆசியர்கள் மற்றும் பணியாளர்களுக்குச் சம்பளம் கொடுக்க முடியும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த மூன்று மாதங்களாக பள்ளிகள் இயங்காவிட்டாலும், அங்கு பணியாற்றும் அனைவருக்கும் தனியார் பள்ளிகள் சம்பளம் வழங்கி வருவதாகவும், தற்போது கல்விக் கட்டணம் வசூலிக்க அனுமதித்தால்தான் ஆசிரியர்களுக்கும், ஊழியர்களுக்கும் சம்பளம் கொடுக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு கடந்த முறை நீதிபதி ஆர்.மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, அரசு உதவி பெறாத பள்ளிகள் கட்டணத்தை வசூலிக்காமல் எப்படிச் சம்பளத்தை வழங்க முடியுமென கேள்வி எழுப்பினார். ஆன்லைன் வகுப்புகளைப் பெரும்பாலான பள்ளிகள் தொடங்கிவிட்டு, வகுப்புகளை நடத்த ஆசிரியர்களைக் கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்கும் நிலையில் எப்படிச் சம்பளம் வழங்காமல் இருக்க முடியுமெனவும் கேள்வி எழுப்பினார்.

இந்த வழக்கு இன்று (ஜூன்30) மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண் ஆஜராகி, தனியார் பள்ளிகள் கட்டணம் செலுத்தும்படி பெற்றோரை நிர்பந்திக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், அதேசமயம் பெற்றோர் தாமாக விருப்பப்பட்டு கட்டணம் செலுத்துவதற்கு எந்தத் தடையும் இல்லை என்றும் தெரிவித்தார்.

கல்வி உரிமைச் சட்டத்தின்கீழ், 25 சதவீத இடங்களுக்கு 248 கோடியே 76 லட்சம் ரூபாய் ஏற்கெனவே தனியார் பள்ளிகளுக்கு விடுவிக்கப்பட்டுள்ளதால், அந்தத் தொகையைப் பயன்படுத்தி மூன்று, நான்கு மாதங்களுக்கு ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்கலாம் என்றும் விளக்கம் அளித்தார்.

தவணை முறையில் கட்டணம் செலுத்துவது தொடர்பாக பல்வேறு உயர் நீதிமன்றங்கள் உத்தரவிட்டுள்ளதாகவும் தமிழக அரசு தெரிவித்ததையடுத்து, இது தொடர்பாக திட்டம் வகுக்கக் கோரி தனியார் பள்ளிகள் சங்கங்கள் அரசுக்கு மனு அளிக்கலாம் என மனுதாரர் தரப்புக்கு நீதிபதி அறிவுறுத்தினார்.

தனியார் பள்ளிகளின் கோரிக்கைகளைப் பரிசீலித்து விரைந்து திட்டத்தை வகுக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கு விசாரணையை ஜூலை 6 ஆம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x